“பெண்கள் குறித்து தொடர் இழிவு பேச்சு; சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீக்குக!" – பாஜக வலியுறுத்தல்

தி.மு.க-வைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஏற்கெனவே ஆளுநர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, குஷ்பு ஆகியோரை பொதுக்கூட்ட மேடையில் தவறாகப் பேசியதற்காகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட சிவாஜி, தி.மு.க-வுக்கு தேர்தல் பிரசாரங்களும் மேற்கொண்டார். இந்த நிலையில், தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜனை இழிவுபடுத்தி பேசியதாகவும், அவரைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யுமாறும் பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

அந்த அறிக்கையில், “தி.மு.க-வின் அதிகாரபூர்வ பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆகியோர் பற்றி அருவருக்கத்தக்க வகையில், ஆபாசமாகப் பேசியது பெரும் சர்ச்சையானது. இது தமிழகத்தில் குறிப்பாக பெண்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியின்றி அவரை தி.மு.க அரசு கைதுசெய்தது. அவரை கட்சியிலிருந்து நீக்கியதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டு நாடகமாடினார்கள். ஆனால், சில மாதங்களில் மீண்டும் தி.மு.க-வில் சேர்த்துக் கொண்டு விட்டார்கள். அவர்மீதான சட்ட நடவடிக்கை என்ன ஆனதென்று தெரியவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க பிரமுகர் விருதுநகர் வேட்பாளர் ராதிகா சரத்குமார் அவர்களை ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் கேவலமாகப் பேசினார். தமிழக மக்களிடமும் பெண் சமுதாயத்திடமும் பெரும் எதிர்ப்பு கிளம்பியபோதும் அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர், தெலங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து கொச்சையாக, இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். தி.மு.க-வின் அதிகாரபூர்வ பேச்சாளரான அவர், தமிழிசையை மட்டும் கொச்சைப்படுத்தவில்லை. ஒட்டுமொத்த பெண்களையும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார். இது கடும் கண்டனத்திற்குரியது.

ஏ.என்.எஸ்.பிரசாத்

இது போன்ற குற்றங்களுக்காக ஏற்கெனவே அவர்மீது பல வழக்குகள் உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். இதுபோல ஒரு கட்சியின் தலைவர்களைக் குறிவைத்து இழிவுபடுத்தி பேசி வருவது, சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி, அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் உள்நோக்கம் கொண்டதாகும். எனவே, அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆபாசமாக மற்றவர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது அவரது பிரச்னை மட்டுமல்ல. தி.மு.க-வின் கலாசாரமே அதுதான். தி.மு.க-வில் அதிகாரபூர்வமாகப் பேச்சாளர்கள் நூற்றுக்கணக்கில் நியமித்திருப்பதே, அரசியல் எதிரிகளை, கொள்கை எதிரிகளை ஆபாசமாக, அருவருக்கத்தக்க வகையில் பேசி அச்சுறுத்தத்தான். எனவே, தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஆபாச பேச்சுக்கு, ஜனநாயகம், பெண்ணுரிமையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன் – சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

ஜனநாயகத்தில், பெண் உரிமையில் தி.மு.க-வுக்கு உண்மையான அக்கறை இருந்தால், அநாகரிகத்தின் அருவருப்பான வார்த்தைகளின் உருவமாகச் செயல்படும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தி.மு.க-விலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லையெனில், தி.மு.க தலைமை சொல்லித்தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இப்படி பேசி வருகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.