இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் கில்லுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றார். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் 19 வயதான இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் இந்த போட்டியில் அறிமுகமானார். அறிமுக போட்டியிலேயே சிறப்பாக விளையாடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து அதிரடியை வெளிப்படுத்தினார். பும்ராவின் பந்தில் சிக்ஸ் அடித்து நீண்ட நாள் சாதனையை தகர்த்துள்ளார். பின்பு ஜடேஜாவின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்நிலையில் விராட் கோலிக்கும், சாம் கான்ஸ்டாஸ்க்கும் இடையே மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10வது மற்றும் 11வது ஓவர்களுக்கு இடையே சாம் கான்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா முனைகளை மாற்றிக் கொண்டிருந்த போது, விராட் கோலி சாம் கான்ஸ்டாஸ் நோக்கி நடந்து சென்று அவருடன் மோதினார். அந்த சமயத்தில் கமெண்டரியில் இருந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங், கோலி வேண்டுமென்றே இதை செய்ததாக குறிப்பிட்டார். பிறகு ரீப்ளேக்களில் விராட் கோலி வேண்டும் என்றே மோதாததும், அதே சமயம் சாம் கான்ஸ்டாஸ் அவரது கையுறைகளை சரி செய்ததால் கோலி வருவதை பார்க்காததும் தெரிய வந்தது.
“Have a look where Virat walks. Virat’s walked one whole pitch over to his right and instigated that confrontation. No doubt in my mind whatsoever.”
– Ricky Ponting #AUSvIND pic.twitter.com/zm4rjG4X9A
— 7Cricket (@7Cricket) December 26, 2024
ஐசிசி விதிகள் சொல்வது என்ன?
கிரிக்கெட் விதிகளின் படி, ஒரு வீரர் மற்றொரு வீரருடன் களத்தில் வேண்டுமென்றே உடல் ரீதியான மோதிக்கொள்வது குற்றம் ஆகும். இது MCC சட்டங்களின் 42.1வது அத்தியாயத்தின் கீழ் வருகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை என்று விதிகள் கூறுகிறது. ஆன்-பீல்ட் நடுவர்கள் இது குறித்து புகார் அளிக்கும் பட்சத்தில், போட்டியின் ரெபிரி இறுதி முடிவை எடுப்பார். விராட் கோலி வேண்டுமென்றே தான் சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதலில் ஈடுபட்டார் என்று போட்டி நடுவர் தீர்மானித்தால், அவர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விதிகளின் படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் வீரர்கள் மீது 2 விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போட்டி கட்டணத்தில் இருந்து 50% முதல் 100% வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது சில போட்டிகள் விளையாட தடை விதிக்கப்படும். போட்டி நடுவர் விராட் கோலிக்கு நான்கு டீமெரிட் புள்ளிகளை வழங்கினால், ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு வெள்ளை பந்து போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்படலாம். நடுவரின் இறுதி முடிவு விராட் கோலிக்கு எதிராக வந்தால், அவர் ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்டில் விராட் கோலி விளையாட முடியாது. இருப்பினும், தடை விதிக்கப்பட்டால் அதற்கு எதிராக இந்திய அணி நிர்வாகமோ அல்லது விராட் கோலியோ மேல்முறையீடு செய்யலாம்.