திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் தவறி விழுந்து, சேலையூர் வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம், பக்தர்கள், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரராகவபெருமாள் கோயிலில் தற்போது சித்திரை பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் பகுதியில் உள்ள மடம் ஒன்றில் உள்ள வேத பாடசாலை மாணவர்களான ஹரிஹரன்(16), வெங்கட்ராமன்(17), வீரராகவன்(24) ஆகிய 3 பேர் வேத பாராயணம் படித்து வந்தனர்.
இந்நிலையில், ஹரிஹரன், வெங்கட்ராமன், வீரராகவன் ஆகிய 3 பேரும் இன்று (மே 6) காலை வீரராகவபெருமாள் கோயில் தெப்பக் குளத்தின் படிக்கட்டுகளில் நீரில் நின்றவாறு சந்தியா வதனம் செய்து கொண்டிருந்தனர். இதில் ஒரு மாணவர், தெப்பக் குளத்தினுள் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனை கண்ட மற்ற இரு மாணவர்கள், நீரில் மூழ்கிய மாணவரை காப்பாற்ற குளத்தில் குதித்தபோது, அவர்களும் நீரில் மூழ்கினர்.
இதுகுறித்து, தகவலறிந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து குளத்தில் மூழ்கிய வேதபாட சாலை மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு, 3 மாணவர்களை சடலங்களாக மீட்டனர். தொடர்ந்து, திருவள்ளூர் டவுன் போலீஸார், 3 மாணவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.