பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகில் வாழ்ந்த பிரமாண்ட மிருகமான டைரனோசொரஸ் ரெக்ஸ் (டைனோசரின் ஒரு இனமாகும்), கால மாற்றத்தால் தற்போது உயிருடன் இல்லை. டைரனோசொரஸ் (டி ரெக்ஸ்) மிருகத்தின் டிஎன்ஏவிலிருந்து பர்ஸ்கள் மற்றும் தோல்பைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பிரபல நிறுவனங்கள் கூறியுள்ளது.
இது தொடர்பாக நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ பொறியியல் பேராசிரியர் சே கானன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லேப்-க்ரோன் லெதர் லிமிடெட் மற்றும் தி ஆர்கனாய்டு கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் டி-ரெக்ஸ் லெதரை உருவாக்கியுள்ளன.

இது எவ்வாறு சாத்தியமாகும், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே டி ரெக்ஸ் அழிந்து விட்டது, அதன் தோல் எப்படி கிடைக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.. அவர்களின் திட்டப்படி, அதிநவீன மரபணு மற்றும் புரதங்களை பயன்படுத்தி முற்றிலும் புதிய பொருட்களை உருவாக்க முடியும் என்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டி ரெக்ஸ் மற்றும் டைனோசர்களின் புதைபடிவங்களில் உள்ள கொலாஜன் (கொலாஜன் ஒரு முக்கிய கட்டமைப்பு புரதமாகும், இது உடலின் பல பாகங்களை ஒன்றிணைத்து வைத்திருக்க உதவுகிறது) பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு, MIT ஆராய்ச்சியாளர்கள் டைனோசர் கொலாஜன்களை பாதுகாக்கும் முறையை கண்டுபிடித்தனர். அதன்படி டி-ரெக்ஸ் கொலாஜன், அதன் DNA க்களை ஆய்வகத்தில் வளர்த்து, தன்மையை மேம்படுத்திய பிறகு டி-ரெக்ஸ் தோல்களை உருவாக்க முடியும் என்று பேராசிரியர் சே கானன் கூறுகிறார்.

தற்போது விலங்குகளை அழித்து அதன் மூலம் தோல் பொருட்களை உருவாக்குகின்றோம். இந்த சோதனை வெற்றியடைந்தால் பல விலங்குகள் அழிவிலிருந்து காப்பாற்றபடும் என்றும் கூறுகிறார். மேலும் டி-ரெக்ஸ் தோல் மூலம் உருவாக்கப்படும் பொருட்கள் பூமியில் எளிதில் மக்கும்படியாக இருக்கும் என கூறியுள்ளார்
2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு முதன்மையான ஆடம்பரப் பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. ஆனால் சில விஞ்ஞானிகள் இது இயற்கைக்கு மாறான செயல் என்றும் இதனை உருவாக்க முடியாது என்றும் அழிந்து போன விலங்கின் கொலாஜன் மூலம் அசலான உயிரின் (டிரெக்ஸ்) தோலை உருவாக்க முடியாது என்றும் கூறுகின்றனர் .
ஆகவே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன டைனோசர் தோல் பை விற்பனைக்கு வருமா? இதற்கான பதிலை வரும் காலம் தான் கூற வேண்டும்.