புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் நிறுத்தம் என இரு நாடுகளும் முடிவு செய்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், முப்படைகளின் தளபதிகள், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சனிக்கிழமை (மே 10) போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் என்பது கவனிக்கத்தக்கது. இந்தக் கூட்டம் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. வரும் 12-ம் தேதி (திங்கள்கிழமை) போர் நிறுத்த ஒப்பந்தம் இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல். அதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்தம்: இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் இன்று (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இதன்மூலம் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. இரு தரப்பு பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சமரச முயற்சியில் ஈடுபட்டத்தை அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பேரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத தளங்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது இந்தியா. தொடர்ந்து வியாழக்கிழமை இரவு முதல் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது. அதை இந்தியா வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்தது. இந்தச் சூழலில், அமெரிக்காவின் தலையீட்டுக்குப் பின் தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.