ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேற்ய் நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக மே 08ஆம் தேதி ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒரு வாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் பிறகு மீதமுள்ள ஐபிஎல் போட்டி எங்கு, எந்த தேதிகளில் நடக்கும் என்ற முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.
ஐபிஎல் தொடரை நடத்த பல்வேறு நாடுகள் பிசிசிஐக்கு அழைப்பு விடுத்திருந்தது. எனினும் பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த திட்டமிடபட்டிருக்கிறது. அதன்படி பாதுகாப்பு காரணங்களுக்காக வட மாநிலங்களில் ஐபிஎல் போட்டியை நடத்தாமல், தென் இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது சென்னை சேப்பாக் மைதானம், பெங்களூரு சின்னசாமி மைதானம் மற்றும் ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானம் ஆகிய மூன்று மைதானங்களில் மீதமுள்ள போட்டிகளை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதில் சென்னை முக்கியமான மைதானம் என்பதால், முக்கிய போட்டிகள் மற்றும் இறுதி போட்டியை சென்னை சேப்பாக்கில் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மூன்று நகரங்களும் பாகிஸ்தானின் எல்லையில் இருந்து நீண்ட தூரத்தில் இருப்பதால் இந்த நகரங்களை பிசிசிஐ தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான அட்டவணை மற்றும் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் இரு நாட்டு மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஐபிஎல் தொடரும் விரைவில் தொடங்க இருப்பது ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக உள்ளது.
மேலும் படிங்க: பாதியில் நின்ற பஞ்சாப் டெல்லி போட்டி ரிசல்ட் என்ன? பிசிசிஐ அந்தர் பல்டி!
மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின், விராட் கோலியால் முறியடிக்கப்படாத இந்திய பேட்ஸ்மேனின் சாதனை..!