Aadhaar Complaint : ஆதார் அட்டையைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களை மனதில் கொள்வது மிகவும் முக்கியம். ஒரு சிறிய தவறுக்கு மிகப்பெரிய அபராதம் அல்லது சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம். இந்தியாவைப் பொறுத்தவரை ஆதார் அட்டை நாட்டின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இன்று மாறிவிட்டது. இது பல அரசு மற்றும் அரசு சாரா பணிகளுக்கு கூட ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. வங்கிக் கணக்கைத் திறப்பது, மொபைல் சிம் பெறுவது அல்லது ஹோட்டலில் செக்-இன் செய்வது போன்ற எல்லா விஷயங்களுக்கும் ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்ய ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையை தவறாகப் பயன்படுத்துவது சிறைத்தண்டனைக்கும் வழிவகுக்கும்.
ஆதார் அட்டை அபராதம்
ஆதார் அட்டை என்பது ஒருவரின் கருவிழி, கைரேகை ஆகியவற்றின் தரவுகள் பயோமெட்ரிக் சாதனங்களால் சேகரிக்கப்படுகின்றன. இந்த தரவுகள் மிக மிக முக்கியமானவை. ஆனால், இதை யாராவது மோசடி செய்ய முயன்று கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபருக்கு குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனை கூட விதிக்கப்படலாம். UIDAI (அபராதங்களைத் தீர்ப்பது) விதிகள், 2021 இன் படி, அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது UIDAI வழிகாட்டுதல்களை மீறும் பட்சத்தில் UIDAI அபராதம் விதிக்கும்.
3 ஆண்டுகள் சிறை எப்போது?
uidai.gov.in என்ற வலைத்தளத்தின்படி, ஆதார் எண் வைத்திருப்பவரின் பயோமெட்ரிக் தகவல்களை மாற்றுதல், மாற்ற முயற்சி செய்தல்,அவரது அடையாளத்தை ஆள்மாறாட்டம் செய்ய பயன்படுத்துவது சட்டப்படி மிகப்பெரிய குற்றம். அவ்வாறு ஒருவரின் அடையாளத்தை திருடுவதற்காக மோசடி செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூ.10,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆதார் அட்டையை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?
– முதலில், MyAadhaar வலைத்தளத்திற்குச் சென்று உள்நுழையவும்.
– பின்னர் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா குறியீட்டை நிரப்பவும். “OTP மூலம் Enter” என்பதைக் கிளிக் செய்யவும்.
– உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும், அதை உள்ளிட்டு உள்நுழையவும்.
– இப்போது “Authentication History” பகுதிக்குச் செல்லவும். உங்கள் ஆதார் அட்டை எப்போது பயன்படுத்தப்பட்டது என்பதை இங்கே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
– உங்கள் ஆதார் அட்டையை யாராவது தவறாகப் பயன்படுத்தியதாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக UIDAI-க்கு புகாரளிக்கவும்.