இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்திருப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, ஆபரேஷன் சிந்தூருக்கு பின்பு இந்தியாவுடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதில் அமெரிக்கா ஆற்றிய பங்கினை வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிக்கையை பாகிஸ்தான் வரவேற்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஆதரிப்பதில் அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகள் ஆற்றிய முக்கியமான பங்களிப்பை பாகிஸ்தான் பாராட்டுகிறது. இது பிராந்திய ஸ்திரத்தன்மையை பேணுவதற்கான ஒரு படியாகும்.
தெற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் நீண்ட கால பிரச்சினையான காஷ்மீர் சிக்கலைத் தீர்ப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வந்திருப்பதற்கு எங்களின் பாராட்டுகள். ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கான எந்த ஒரு நியாயமான மற்றும் நீண்டகால தீர்வும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின் படி இருக்க வேண்டும். மேலும், ஜம்மு காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்பதை பாகிஸ்தான் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளத்தினைப் பேணுவதற்கான முயற்சிகளில் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுடன் ஈடுபடுவதற்கு பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாதாக ட்ரூத் சமூக ஊடகத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வரலாற்று சிறப்பான மற்றும் வீரதீரமிக்க முடிவினை எடுப்பதில் அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்ததில் நான் பெருமையடைகிறேன். இன்னும் விவாதிக்கப்படாவிட்டாலும், இரண்டு பெரிய நாடுகளுடனும் கணிசமான அளவில் வணிகத்தை அதிகரிக்கப்போகிறேன்.
கூடுதலாக ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில் ஒரு தீர்வினை எட்ட முடியுமா என்பதனைப் பார்க்க உங்கள் இருவருடனும் இணைந்து பணியாற்றுவேன். சிறப்பாக செயல்பட்டமைக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைமைக்கு கடவுள் அருள் புரியட்டும்” என்று தெரிவித்திருந்திருந்தார்.