புதுடெல்லி,
இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த விராட், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்தார்.
இதனிடையே இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதற்கு முன்பே ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி திடீரென அறிவித்தார். ரோகித் சர்மா ஓய்வு முடிவை அறிவித்த சில தினங்களில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட்கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட்கோலி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாகவும், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான விராட்கோலி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதால் அவரது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்தார். இது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. விராட் கோலி ஓய்வு பெற்றதை அடுத்து பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
மிக்க நன்றி. விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது, ஆனால் அந்த மரபு என்றென்றும் தொடரும். முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். இந்திய அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் போற்றப்படும். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.