பெய்ஜிங்: சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களுடன் சரக்கு விமானம் அனுப்பப்பட்டதாக வெளியாகிய செய்தியை அந்நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்ட பதிவு ஒன்றில், ‘சீன ராணுவம் திங்களன்று தனது மிகப் பெரிய ராணுவ சரக்கு விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு ஆயுத தளவாடங்களை எடுத்துச் சென்றதாக வெளியான செய்தி உண்மையல்ல. மக்கள் விடுதலை ராணுவ விமானப் படை (PLAF), அதன் சியான் Y-20 ராணுவ போக்குவரத்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்களை எடுத்துச் சென்றதாக வெளியான செய்தி உண்மையல்ல.
இத்தகைய அறிக்கைகள் உண்மைக்குப் புறம்பானவை. இணையம் சட்டத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. ராணுவம் தொடர்பான வதந்திகளை உருவாக்கி பரப்புபவர்கள் சட்டபூர்வமாக பொறுப்பேற்கப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உடனான மோதலை அடுத்து, பாகிஸ்தான் ராணுவ ரீதியாக பெரும் இழப்பைச் சந்தித்துள்ள நிலையில், அது அவசரமாக ராணுவ தளவாடங்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக, பாகிஸ்தானுக்கு உதவ அதன் நட்பு நாடான சீனா முன்வந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே, ராணுவ உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சீனா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.