தென்காசி: பணி அனுபவ சான்று வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம்; கல்வித்துறை அதிகாரி கைது!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் திருவேங்கடம் வட்டம், செவல்குளத்தில் உள்ள செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அவர், அந்த பள்ளியில் பணிபுரிந்த காலங்களுக்கு பணி அனுபவ சான்று கேட்டு பள்ளி தாளாளரிடம் விண்ணப்பித்துள்ளார். அதன்படி, பணி அனுபவ சான்றை தயார் செய்த பள்ளி தாளாளர் நாகராஜ் (46) என்பவர், அதில் மேலொப்பம் பெற்று, அலுவலக நடைமுறைகளை முடித்து தருவதற்காக தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்தில் (தனியார் பள்ளி) சமர்ப்பித்துள்ளார். இதுதொடர்பாக தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரை சந்தித்து பேசியபோது, அவர் ஆசிரியரின் பணி அனுபவ சான்றை மேலொப்பம் பெற்று அலுவலக நடைமுறைகளை முடித்து வழங்குவதற்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

சுரேஷ்குமார்

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பள்ளி தாளாளர் நாகராஜ், இதுகுறித்து தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் 60 ஆயிரத்தை அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ் குமாரிடம் பள்ளி தாளாளர் நாகராஜ் கொடுத்தார். லஞ்ச பணத்தை சுரேஷ் குமார் பெற்றுக் கொண்டதையடுத்து அங்கு மறைந்திருந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் பால் சுதர், காவல் ஆய்வாளர் ஜெய ஸ்ரீ தலைமையிலான போலீஸார், அதிரடியாக உள்ளே நுழைந்து சுரேஷ்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.