சென்னை,
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இன்னும் 13 லீக் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறி விட்டது. இருப்பினும் வருங்காலத்திற்கான அணியை கட்டமைக்கும் நோக்கில் சென்னை அணி நிர்வாகம் களமிறங்கியுள்ளது.
முன்னதாக நடப்பு சீசனின் தொடக்க கட்டத்தில் சில போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரராக மும்பையை சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே நிர்வாகம் சென்னை அணியில் சேர்த்தது.
அந்த வாய்ப்பில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஆயுஷ் மாத்ரே நடப்பு தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 163 ரன்களை 181 ஸ்டரைக்ரேட்டில் குவித்துள்ளார். இதனால் சென்னை அணியின் வருங்கால நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் சென்னை அணியில் தான் தேர்வானது எப்படி என்பது குறித்து சில கருத்துகளை ஆயுஷ் மாத்ரே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “சிஎஸ்கே உன்னை எதிர்பார்க்கிறது, அணியின் தரப்பில் இருந்து அழைப்பார்கள். தயாராக இரு’ என சூர்யகுமார் யாதவ்தான் முதலில் எனக்குச் சொன்னார். நான் மனதளவில் தயாராக இருந்தேன். அதன் பிறகு, ஸ்ரீகாந்த் சார் என்னிடம், ‘நீங்கள் இங்கே இரண்டு நாட்க சென்னை பயிற்சி முகாமுக்கு வர வேண்டும். நாங்கள் உங்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். சென்னை அணியின் ஒரு பகுதியாக இருக்கப்போவதில் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன்” என்று கூறினார்.