சென்னை: குடும்பப் பிரச்னை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றி வந்த திருநாவுக்கரசு, 2023 ஏப். 30-ம் தேதி பணி ஓய்வு பெறவிருந்தார். அவரது மருமகள் அளித்த வரதட்சணைக் கொடுமை புகாரின் பேரில் பேராசிரியர் திருநாவுக்கரசு, அவரது மகன் உள்ளிட்டோருக்கு எதிராக செம்பியம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை காரணம் காட்டி, பேராசிரியர் திருநாவுக்கரசுக்கு எதிராக குற்றக் குறிப்பாணை பிறப்பித்த பல்கலைக்கழகம், அவர் ஓய்வு பெறுவதற்கு 4 நாட்களுக்கு முன்பாக அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து திருநாவுக்கரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, குடும்பப் பிரச்சனை தொடர்பான வழக்கை காரணம் காட்டி பணியிடை நீக்கம் செய்ய முடியாது என்று கூறி, அவரது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து, அவர் பணி ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், “ஒரு பேராசிரியருக்கு எதிரானக் குற்றச்சாட்டு பல்கலைக்கழகத்தின் பொதுநலனுடன் தொடர்புடையது என்றால் மட்டுமே அவரை பணியிடை நீக்கம் செய்ய முடியும் என பல்கலைக்கழக விதிகளில் கூறப்பட்டுள்ள நிலையில், குடும்பப் பிரச்னை தொடர்புடைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனுதாரரை எந்த அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்ய முடியும்? இதில் என்ன பொதுநலன் உள்ளது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எனவே, மனுதாரரின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே. அதில் எந்தத் தவறும் இல்லை” என்று கூறி, பல்கலைக்கழகத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களை 12 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.