மும்பை: “பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட விரும்பும் பெருமைமிக்க இந்தியர்களான நாங்கள் செல்கிறோம். நாங்கள் கட்சியின் சார்பாகப் போகவில்லை. இந்தியா சார்பாக மற்ற நாடுகளுக்குச் செல்கிறோம்” என்று தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் பாகிஸ்தான் குறித்து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதாரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்கர் பிரசாத், சசிதரூர், கனிமொழி, சுப்ரியா சுலே உட்பட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் அடங்கிய தூதுக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவினர் பிரிட்டன், ஆப்ரிக்க நாடுகள், வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலை குறித்து விளக்க உள்ளனர்.
சுப்ரியா சுலே தலைமையிலான குழு, எகிப்து, கத்தார், எத்தியோப்பியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்க இருக்கிறது. இக்குழுவில், பாஜகவின் ராஜீவ் பிரதாப் ரூடி, அனுராக் சிங் தாக்குர், வி. முரளீதரன், காங்கிரஸின் மணீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, தெலுங்கு தேசம் கட்சியின் லாவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயுலு, ஆம் ஆத்மி கட்சியின் விக்ரம்ஜீத் சிங் சாஹ்னி மற்றும் ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரியா சுலே, “நாங்கள் கட்சியின் சார்பாகப் போகவில்லை. இந்தியா சார்பாக நாங்கள் மற்ற நாடுகளுக்குச் செல்கிறோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராகப் பேச மாட்டோம் என்று முடிவு செய்யப்பட்டது. என்சிபி – எஸ்சிபி தலைவர் சரத் பவாரும் இது நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட சரியான நேரம் அல்ல என்றும் கூறினார். ஆபரேஷன் சிந்தூர் முடிந்ததும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். தற்போது, ஆபரேஷன் சிந்தூர் நடந்து கொண்டிருக்கிறது.
குழுக்கள் இரண்டு பகுதிகளாகப் போகின்றன. பிரதமர், வெளியுறவு அமைச்சகம் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோருக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இது அரசியல் பற்றியது அல்ல. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட விரும்பும் பெருமைமிக்க இந்தியர்களான நாங்கள் செல்கிறோம். உலகில் எங்கும் எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கைகளையும் நாங்கள் கண்டிக்கிறோம். இந்தியா எப்போதும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சிக்காக பாடுபடுகிறது. இதுதான் நாங்கள் கொண்டு செல்லும் செய்தி.
நாங்கள் அனைவரும் இணைந்திருக்கிறோம், கட்சி பிரச்சினைகள் இதில் இல்லை, அனைவரும் ஒருவருக்கொருவர் பேசுகிறோம். அரசியல் இல்லை, பெருமைமிக்க இந்தியர்களாக நாங்கள் செல்கிறோம்,” என்று தெரிவித்தார்.
எம்பிக்கள் குழுக்களின் வெளிநாடுகளுக்கான பயணம் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 10 நாட்களுக்கு இந்த பயணம் இருக்கும். இந்த பயணத்தின்போது, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகள், பஹல்காம் தாக்குதலின் பின்னணி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் பொய் பிரச்சாரங்கள் ஆகியவை குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடம் எம்.பி.க்கள் ஆதாரங்களுடன் எடுத்துரைப்பார்கள்.
இந்தியாவுக்கு எதிராக இதுவரை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு, இதில் அந்த நாட்டின் ராணுவம், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவை எவ்வாறு பின்னி பிணைந்துள்ளன என்பதற்கான முழு ஆதாரங்களை வெளியுறவு துறை, நாடாளுமன்ற விவகார துறை, உள்துறை அமைச்சகங்கள் இணைந்து ஆவணங்களாக தயாரித்து வருகின்றன. எம்.பி.க்கள் குழுவினரிடம் இந்த ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன. அவற்றின் மூலம் உலக நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய எம்.பி.க்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.