ராஜஸ்தானுக்கு எதிரான தோல்வி… சி.எஸ்.கே பயிற்சியாளர் கூறியது என்ன..?

டெல்லி,

ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 188 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 188 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த தொடரில் இதுவரை 13 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி அதில் 3 வெற்றி, 10 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

உண்மையில் நாங்கள் புள்ளி பட்டியலில் கீழே இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. இது எங்களுக்கு உந்துதலை தரக்கூடியது கிடையாது. நாங்கள் நல்ல செயல் திறனை மட்டுமே வெளிப்படுத்த விரும்பினோம். சில செயல் திறன்களை ஒன்றிணைக்கவும் நினைத்தோம். ஆனால், எங்களால் செய்ய முடியாமல் போய்விட்டது. நாங்கள் விளையாடிய முறைக்கு நாங்கள் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்க தகுதியானவர்கள். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை.

நாங்கள் எங்களுடைய பேட்டிங் ஆர்டரை மறுசீரமைக்க எப்பொழுதும் வேலை செய்து வருகிறோம். அடுத்த ஆண்டுக்கான வலுவான யோசனைகள் எங்களிடம் இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு எங்களால் அதை செய்ய முடியாது. ஏனென்றால் எங்களுடைய டாப் ஆர்டரிடம் இருந்து ரன்கள் வரவில்லை.

நாங்கள் எவ்வளவு சிறப்பாக ஆரம்பத்தில் பேட்டிங்கை தொடங்குகிறோம் என்பதை பொறுத்து தான் அடுத்த யார் பேட்டிங் செய்ய வரவேண்டும்? என்பது தீர்மானிக்கப்படுகிறது. எங்களுக்கு நாங்கள் நினைத்தபடி மேலே இருந்து ரன்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் நல்ல இன்னிங்சை உருவாக்குவதற்கு பதிலாக சரி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.