சென்னை: திமுக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் காலம் வெகுதொலைவில் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மக்களின் நலனுக்கு ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்லாமல், இன்று தன் மகனையும், அவரது கூட்டாளிகளையும் காப்பாற்ற, டெல்லி செல்ல ‘நிதி ஆயோக்’ பெயரை பயன்படுத்தும் சந்தர்ப்பவாத முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ரகுபதி மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வாழ்வளித்த இயக்கத்தையும், அரசியல் அங்கீகாரம் தந்த ஜெயலலிதாவையும், காட்டிக் கொடுத்து, தீய சக்தி திமுகவில் தஞ்சமடைந்து தனது வாழ்வை மேலும் வளப்படுத்திக்கொண்டு, எஜமான விசுவாசத்தைக் காட்ட முயற்சிக்கிறார்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்லாயிரம் கோடிகளை வாரிச் சுருட்டியது அம்பலமானதும், டெல்லி பாணியில் நடைபெறப் போகும் கைது படலங்களுக்கு பயந்து நடுங்குவது, ரகுபதியின் வார்த்தைகளில் இருந்து தெரிகிறது. தமிழகத்தில் சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை மத்திய அரசின் தன்னிச்சை அதிகாரம் பெற்ற புலனாய்வுத் துறைகளின் விசாரணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ தமிழக அரசே வழக்குத் தொடுக்காத நிலையில், திமுக அரசு கனிம வளக் கொள்ளை வழக்கில் அரசு அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கேட்டும், சாட்சிகளை விசாரிக்கக்கூடாது என்றும், டாஸ்மாக் ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணையை எதிர்த்தும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ளநர். இதில் இருந்தே ‘மடியில் கனம், வழியில் பயம்’ என்பது தமிழக மக்களுக்கு தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.
இவர்கள், எங்கள் பழனிசாமியின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அறிக்கை என்ற பெயரில் பிதற்றியுள்ளனர். உங்கள் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ரகுபதியின் கணக்குகள் எங்களிடம் உள்ளது. அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை. காலச் சக்கரம் சுழல்கிறது. இந்த அரசை தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.