‘பொதுமக்களை கொன்றுவிட்டு தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது’ – சசி தரூர்

புதுடெல்லி: பொதுமக்களை கொன்றுவிட்டு, பிறகு தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. 4 நாட்களாக நடைபெற்ற போர் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதையடுத்து சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுடன் தொடர்புடைய நாடுகளிடம் தெரிவிக்க அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அனுப்பியது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கயானா நாட்டின் தற்போதைய துணை அதிபர் பரத் ஜக்தியோவை, ஜார்ஜ்டவுனில் உள்ள அதிபர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பயங்கரவாதம் எங்கு நடந்தாலும், அதை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற முடிவில் நாங்கள் (இந்தியா) தெளிவாக இருக்கிறோம். குற்றத்தில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு நிதியுதவி அளிப்பவர்கள், பயிற்சி அளிப்பவர்கள், ஆயுதங்களை வழங்குபவர்கள் ஆகிய அனைவரும் தண்டிக்கப் படுவார்கள் என்பதை கூறிக் கொள்கிறோம்.” என்றார்.

மேலும் இந்தியா நான்கு தசாப்தங்களாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருவதை எடுத்துரைத்த அவர், “பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்மானமான உறுதிப்பாட்டினை இந்தியா எட்டியுள்ளது. எல்லையை தாண்டிச் சென்று நமது பொதுமக்களைக் கொன்றுவிட்டு பிறகு தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு ஒரு விலை கொடுக்க வேண்டும் என்பதை நாம் காட்ட வேண்டும். இதுதான் இந்தியா சொல்ல விரும்பும் செய்தி. கயானாவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கை மீண்டும் நடந்தால், அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.