மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வழக்கத்திற்கு மாறாக தடுமாற்றமாக செயல்பட்டு வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது.முன்னதாக நடப்பு சீசனின் தொடக்க கட்டத்தில் சில போட்டிகளில் ஆடிய சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனால் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இந்த நிலையில், சென்னை கடைசி இடம் பிடித்தது தொடர்பாக சென்னை அணி வீரர் பதிரனா கூறியதாவது,
நாங்கள் எதிர்பார்த்த சீசனாக இது அமையவில்லை. ஆனால், இந்த ஏற்றத் தாழ்வுகள் மத்தியில், ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது. அது சென்னை ரசிகர்களின் அன்பும், ஆதரவும். என் மீது நம்பிக்கை வைத்த அணிக்கும், நிர்வாகத்திற்கும், ஒவ்வொரு ஆதரவாளருக்கும் நன்றி. தொடர்ந்து கடினமாக உழைப்பேன். இந்த குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றியுள்ளவனாக உணர்கிறேன். என தெரிவித்துள்ளார்.