புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான விலை உயர்ந்தது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்தது. பீருக்கு ரூ.10 வரையிலும், குவார்ட்டர் மதுப்பாட்டில் ரூ.6 முதல் ரூ.30 வரையும் விலை உயர்ந்துள்ளது.
புதுவையில் கடந்த மார்ச்சில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நலத் திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ.500 கோடி தேவைப்படுகிறது. ஆனால் இதற்கான நிதி அரசிடம் இல்லை. அதனால் அரசின் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் எழுந்துள்ளது.
இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதுவை மக்களுக்கு சுமையின்றி, அரசின் வருவாயை பெருக்க முடிவு ஒன்று எடுத்துள்ளனர். அதையடுத்து மது வகைகளுக்கு கலால் வரி, மதுக் கடைகளுக்கு உரிம கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு, ஆகியவற்றை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
தற்போது மதுபானங்களுக்கான கூடுதல் கலால் வரி விதிப்பு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சாதாரண குவார்ட்டர் மது பாட்டிலுக்கு ரூ.6 முதல் உயர் ரக பாட்டிலுக்கு ரூ.30 வரை விலை உயர்கிறது. 750 மி.லி கொண்டு முழு பாட்டிலுக்கு ரூ.24 முதல் ரூ.120 வரை விலை உயர்கிறது.
பீருக்கான விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்கிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு பிராண்டிற்கு தகுந்தபடி கணக்கிடப்படும் என்று கலால் துறையினர் தெரிவித்தனர்.