புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு மாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கையாக இருக்கும் என்றும், சமூக நீதிக்கு வழிவகுக்கும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய புள்ளியியல் பணி பயிற்சி முடித்த 2024 மற்றும் 2025 – ம் ஆண்டுகளுக்கான தொகுப்புகளை சேர்ந்த அதிகாரிகளிடையே உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “தொடக்க காலத்தில், சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறையில் இருந்தது. இறுதியாக, சாதிவாரி கணக்கெடுப்பு 1931-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. அவ்வாறு பல முறை நடத்தப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் எனது சாதி குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. எனவே சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்துள்ளேன்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் முடிவு சிறப்பானது. இந்த முடிவு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் படிநிலையாக இருப்பதுடன், சமூக நீதிக்கும் வழிவகுக்கும். இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களது விருப்பங்களையும் பூர்த்தி செய்வதாக அமையும். பிரிவினையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிந்தனையுடன் சேகரிக்கப்பட்ட சாதி குறித்த தரவுகள் ஒருங்கிணைப்புக்கான கருவியாக இருக்கும். இந்த வழிமுறை சமத்துவத்திற்கான சுருக்கமான அரசியலமைப்பு உறுதிமொழிகளை அளவிடக்கூடிய, பொறுப்புணர்வுள்ள கொள்கை விளைவுகளாக மாற்றும்.
வலுவான புள்ளிவிவரங்கள் எதுவுமின்றி பயனுள்ள கொள்கைக்கான திட்டமிடல் செயலானது இருளில் அறுவை சிகிச்சை மேற்கொள்வது போன்றது. நாட்டின் தேசிய தரவுத்தளத்தில் உள்ள ஒவ்வொரு தரவும் ஒவ்வொரு குடிமகன் தொடர்பான தகவல்களைப் பிரதிபலிக்கிறது. நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கானத் திட்டங்களை வகுக்கும் பொது தரவுகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். சேவை செய்வது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் வளமான அனுபவங்களை அளித்திடும். புள்ளிவிபரங்கள் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்காது.
வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுப்பதற்கான இந்தியாவின் விருப்பங்கள் ஆதார அடிப்படையிலான திட்டமிடலில் உறுதியாக வேரூன்றியுள்ளன. ஒரு தேசமாக, நம் அனைவருக்கும் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்பது வெறும் கனவு அல்ல, அது நம் அனைவரின் குறிக்கோள்” என்று தெரிவித்தார்.