புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருடப்படும் செல்போன்கள், கண்டறியப்பட்டு வெற்றிகரமாக உரியவர்களிடம் சேர்க்கப்படும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இதற்காக போலீஸார் உதவியுடன் மத்திய அரசு நடத்தும் இணையதளம் உதவி வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் பலர் தங்களது செல்போன்களை தவறவிடுகின்றனர். மேலும் சிலர், திருடர்களிடம் தங்களது செல்போன்களை பறிகொடுக்கின்றனர். அதேநேரத்தில் திருடப்படும் செல்போன்கள் குறித்து போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் குறைவாகவே உள்ளன. இருந்தபோதும் புகார் தரப்பட்ட செல்போன் திருட்டுகள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து அவற்றைக் கண்டறிந்து வருகின்றனர்.
அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் போலீஸ் நிலையத்துக்கு 70-க்கும் மேற்பட்ட செல்போன் பார்சல்கள் வந்துள்ளன. இவை அனைத்தும் திருடப்பட்டு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள கள்ளச்சந்தைகளில் விற்கப்பட்டவை. இவ்வாறு கள்ளச்சந்தைகளில் விற்கப்படும் செல்போன்களை தெரியாமல் வாங்கும் நபர்கள், அதன் உண்மைத்தன்மையை அறிந்து அவற்றை போலீஸார் உதவியுடன், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.
6 மாதங்களுக்கு முன் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர், மிகக்குறைந்த விலையில் ஒரு கடையில் செல்போனை வாங்கியுள்ளார். அப்போதுதான் அந்த செல்போன் உ.பி. மாநிலம் காஸியாபாத்திலுள்ள ரஞ்சித் ஜா என்ற சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. ரஞ்சித் ஜா அந்த செல்போனை கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி தவறவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ரஞ்சித் ஜா கூறும்போது, “நான் ஒரு நேர்முகத் தேர்வுக்குத் தயாராகிவிட்டு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் சென்றேன். அப்போது போன் பேசிவிட்டு போனை தவறுதலாக கையிலிருந்து நழுவ விட்டுவிட்டேன். பின்னர் செல்போனை தவறவிட்டதை அறிந்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இப்போது எனது போன் திரும்பக் கிடைத்துள்ளது’’ என்றார்.
திருடு போகும் அல்லது தவறவிடப்படும் செல்போன் எண்களை அதன் ஐஎம்இஐ எண்களை வைத்து தேடுவதற்கு மத்திய அரசு புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் சிஇஐஆர் என்ற இணையதளத்தில், ரஞ்சித் ஜாவுக்கு சொந்தமான செல்போன் ஐஎம்இஐ எண்ணை தேடியபோது, அது ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள ஒரு நபர், வேறு ஒரு சிம் கார்டை போட்டு பயன்படுத்துவது தெரியவந்தது. போலீஸார் உதவியுடன் இந்த சிஇஐஆர் இணையதளம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காஸியாபாத் போலீஸார், புல்வாமா நபரைத் தொடர்புகொண்டு அது திருடப்பட்ட செல்போன் என்று தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த நபர், புல்வாமா போலீஸ் நிலையம் சென்று அந்த செல்போனை கொடுத்துள்ளார். அப்போது அது திருடப்பட்ட அல்லது தவறவிடப்பட்ட செல்போன்தான் என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து போலீஸார் அதை கூரியர் மூலம் காஸியாபாத்திலுள்ள போலீஸ் நிலையத்துக்கு அனுப்பியுள்ளனர். தற்போது அந்த போன் வெற்றிகரமாக அதன் உரிமையாளர் ரஞ்சித் ஜாவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
இப்படித்தான் திருடு போன செல்போன்கள் மீட்கப்படுகின்றன என்றும், இதற்காக சிஇஐஆர் இணையதளம் மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காக மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை அமைச்சகம், சிஇஐஆர் இணையதளத்தை நடத்தி வருகிறது. மேலும் திருடு போன செல்போன்களை கண்டறிய உதவுவதோடு, அந்த செல்போன்களை திருடர்கள் பயன்படுத்த விடாமல் முடக்கவும் இந்த இணையதளம் உதவுகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு மே 16 முதல், 50 லட்சத்துக்கும் அதிகமான செல்போன்கள் காணாமல் போனதாக சிஇஐஆர் இணையதளத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களுக்குப் பின்னர் 19 லட்சம் செல்போன்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 31 லட்சம் செல்போன்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் காணாமல் போன 4.22 லட்சம் செல்போன்களை போலீஸார் தேடுகின்றனர். டெல்லியில் 4.6 லட்சம், உத்தரபிர தேசத்தில் 1.1 லட்சம், தெலங்கானாவில் 1.8 லட்சம், கர்நாடகாவில் 2 லட்சம், ராஜஸ்தானில் 65,368, ஆந்திராவில் 67,454, தமிழகத்தில் 77,564, குஜராத்தில் 56,589 போன்கள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் அந்த
அதிகாரி தெரிவித்தார்.