முல்லன்பூர்,
ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் இன்று நடைபெற்று வரும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 228 ரன்கள் குவித்தது.
மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் கண்டது. குஜராத்தின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் களம் கண்டனர். இதில் கில் 1 ரன்னில் அவுட் ஆனார்.
தொடர்ந்து களம் கண்ட குசல் மெண்டிஸ் 20 ரன், வாஷிங்டன் சுந்தர் 48 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் அரைசதம் அடித்த நிலையில் 80 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து ரூதர்போர்டு மற்றும் ராகுல் திவேதியா ஜோடி சேர்ந்தனர். இதில் ரூதர்போர்டு 24 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஷாரூக் கான் களம் இறங்கினார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்று 2-க்கு முன்னேறியது.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 80 ரன்கள் எடுத்தார். முபை தரப்பில் பவுல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். நாளை மறுநாள் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் மும்பை அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதும்.