சென்னை: பிரபல நடிகர் ராஜேஷ், உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆளுநர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 1949-ம் ஆண்டு பிறந்தவர் ராஜேஷ்.
1972-79 காலகட்டங்களில் சென்னையில் ஆசிரியராக பணியாற்றினார். இதற்கிடையே, 1974-ம் ஆண்டு கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் ராஜ்கண்ணு தயாரிப்பில் கே.பாக்யராஜ் இயக்கிய ‘கன்னி பருவத்திலே’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘அந்த 7 நாட்கள்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘சிறை’, ‘சத்யா’, ‘மகாநதி’, ‘விருமாண்டி’, ‘யானை’ உட்பட 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள இவர், சில படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தனது யூ-டியூப் சேனலில், ஜோதிடர்கள், மருத்துவர்களை சந்திக்கும் நேர்காணல் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். சமீபத்தில் துபாய் சென்றிருந்த ராஜேஷ், 2 நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இந்நிலையில், அவருக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் அவரது உடல் ‘எம்பாமிங்’ செய்யப்பட்டு, சென்னை ராமாபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. ராஜேஷ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, நடிகர்கள் சத்யராஜ், பார்த்திபன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
ஜூன் 1-ல் இறுதிச்சடங்கு: மறைந்த ராஜேஷின் மனைவி கடந்த 2014-ம் ஆண்டு காலமாகிவிட்டார். அவர்களுக்கு திவ்யா என்ற மகள், தீபக் என்ற மகன் உள்ளனர். கனடாவில் வசிக்கும் திவ்யா, தந்தையின் மறைவு செய்தி அறிந்து சென்னைக்கு வந்துகொண்டிருக்கிறார். இறுதிச்சடங்கு ஜூன் 1-ல் நடைபெற உள்ளது. நடிகர் ராஜேஷ் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள், திரையுலகினர், இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: மூத்த தமிழ் நடிகர் ராஜேஷ் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். அவரது குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மை மற்றும் பங்களிப்பு, பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவை வளப்படுத்தியது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது இரங்கல்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நடிகர் ராஜேஷ் கருணாநிதி மீது அளவற்ற அன்பும், மரியாதையும் கொண்டு விளங்கினார். அவரை கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக நியமித்தோம். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரைத்துறை நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: அனைவரிடமும் அன்பாக, இனிமையாக பழகக்கூடியவர் அன்பு சகோதரர் ராஜேஷ். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
ரஜினிகாந்த்: நெருங்கிய நண்பர் ராஜேஷின் மறைவு செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையை தருகிறது. அருமையான மனிதர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: அதிகம் வாசிப்பதையும், வாசித்ததை சிந்திப்பதையும் வழக்கமாக கொண்டவர் அன்பு நண்பர் ராஜேஷ். தன் வாழ்வின் இறுதிவரை உற்சாகமும், செயல்பாடும் குறையாமல் வாழ்ந்த அவரது மறைவு பெரும் வருத்தத்தை தருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக செயல் தலைவர் அன்புமணி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.