தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும்: பிரதமர் மோடி எச்சரிக்கை

போபால்: இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘மகிளா சக்திகரன் மகா சம்மேளனம்’ என்ற பெயரில் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாது: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நமது அப்பாவி மக்களை ரத்தம் மட்டும் சிந்த வைக்கவில்லை. அவர்கள் நமது கலாச்சாரம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் நமது சமூகத்தைப் பிரிக்க முயன்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் பெண்கள் சக்திக்கு சவால் விடுத்தனர். இந்த சவாலே தீவிரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் அழிவாக மாறிவிட்டது. அவர்கள் தொடர்ந்த தாக்குதலால், தங்களுக்கு தாங்களே சாவுமணி அடித்துக் கொண்டனர்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா மிகத் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. அங்கிருந்து செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை இந்திய படைகள் முழுமையாக அழித்தன.பாகிஸ்தானில் பல கிலோமீட்டர் தூரம் வரை சென்று தீவிரவாத முகாம்களை நாம் அழித்தோம். இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர் என்பதில் சந்தேகமில்லை.

நம்மை எதிர்ப்பவர்களுக்கு நான் மீண்டும் ஒரு விஷயத்தை இந்த இடத்தில் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.எதிர்காலத்தில் நமது நாட்டை மீண்டும் தாக்க முற்பட்டால் தீவிரவாதிகள் மட்டுமின்றி அவர்களை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

பாதுகாப்பு துறையில் பெண்கள்: தீவிரவாதிகள் மூலம் மறைமுகமாக போரை நடத்துவதை இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலமாக தெளிவாக உலகுக்குக் எடுத்துக காட்டியுள்ளோம். நீங்கள் எங்கு பதுங்கி இருந்தாலும் உங்கள் வீட்டுக்குள்ளேயே வந்து தாக்குவோம். இன்று, இந்திய பாதுகாப்புத் துறையில் பெண்களின் வலிமையை உலகம் காண்கிறது.நமது எல்லையோர பாதுகாப்பு படையைச் சேர்ந்த (பிஎஸ்எஃப்) மகள்கள் வீராங்கனைகள் நமது எல்லைகளை பாதுகாத்து, ஆபரேஷன் சிந்தூரின் போது தகுந்த பதிலடி கொடுத்தனர்.

இந்தியா கலாச்சாரம் மற்றும் மரபுகளைக் கொண்ட நாடாக உள்ளது. மேலும் நமது பாரம்பரியத்தில் சிந்தூர் (குங்குமம்) என்பது பெண் சக்தியின் சின்னமாகும். சக்தி பூஜையின்போது நாம் குங்குமத்தை வழங்குகிறோம். இந்த சிந்தூர் தற்போது துணிச்சலின் அடையாளமாக மாறிவிட்டது. தற்போது நமது நாடாளுமன்றத்தில் 75 பெண்கள் எம்.பி.க்களாக அமர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை உயர்த்த நாங்கள் முயன்று வருகிறோம். நீண்ட காலமாக நிறைவேறாமல் இருந்த மகளிர் ஒதுக்கீடு, நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் இப்போது நிறைவேறியுள்ளது.

இதன் மூலம் பாஜக தலைமையிலான அரசு நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு ஒவ்வொரு மட்டத்திலும், ஒவ்வொரு துறையிலும் அதிகாரம் அளித்து வருகிறது. பெண்களின் முன்னேற்றத்துக்காக அரசு அதிக பாடுபட்டு வருகிறது. வீரமிக்க பெண்களாக அவர்கள் வலம் வருவதற்கான முன்னெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

கடல் பயணம்: நாட்டின் பாதுகாப்பில் இந்தியாவின் மகள்களின் திறனை இன்று உலகம் கண்டு வருகிறது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பள்ளி முதல் போர்க்களம் வரை, இன்று நாடு தனது மகள்களின் துணிச்சலில் முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கை கொண்டு உள்ளது. கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் ஏ. ரூபா, லெப்டினன்ட் கமாண்டர் கே. தில்னா ஆகியோர் சுமார் 250 நாட்கள் கடலில் பயணம் செய்து வெற்றிகரமாக பயணத்தை முடித்துள்ளனர்.

இயந்திரப் படகில் செல்லாமல் பாய்மரப் படகில் அவர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்துக்கு கடலில் பயணம் செய்து பூமியைச் சுற்றி வந்து சாதித்துள்ளனர். 250 நாட்கள் அவர்கள் கடலில் தங்கியிருப்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக விழாவின்போது ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாளை யொட்டி நினைவு தபால் தலையையும், 300 ரூபாய் நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

குடிமக்கள்தான் கடவுள்: நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு `நாகரீக் தேவோ பவா’ (குடிமக்கள்தான் கடவுள்) என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது. இது தற்போது 300-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ராணி அஹில்யா பாய் ஹோல்கரின் கொள்கையாகும். மிகச் சிறந்த நிர்வாகத் திறன், திறமையான ஆட்சியை வழங்குதல், சமூக நலனுக்கு முன்னுரிமை, கலாச்சாரம், பக்திக்கு பங்களிப்பு போன்ற கொள்கைகளுக்காக புகழ்பெற்றவர் ராணி அஹில்யா பாய். 18-ம் நூற்றாண்டில் மால்வாவின் மிகச்சிறந்த ராணியாக போற்றப்பட்டவர் ராணி அவர். அவரது கொள்கைகளை நாம் பின்பற்றவேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.