Shubman Gill, Hardik Pandya : சுப்மன் கில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்திக் பாண்டியாவை கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அன்பை தவிர வேறெதுவும் இல்லை, இணையத்தில் பார்க்கும் எதையும் நம்பிவிடாதீர்கள் என கேப்சன் போட்டுள்ளார். அத்துடன் ஹர்திக் பாண்டியாவுடன் இருக்கும் புகைப்படத்தையும், அவரை கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தையும் போட்டுள்ளார். அதற்கு ரிப்ளை செய்திருக்கும் ஹர்திக் பாண்டியா, ஆல்வேஸ் சுப்பு பேபி என பதிலுக்கு அவரும் பாசமழை பொழிந்திருக்கிறார். திடீரென இருவரும் இன்ஸ்டாகிராமில் பாசமழை பொழிந்து கொள்வது ஏன்? என பலருக்கும் குழப்பம் இருக்கலாம். இந்த போட்டோவுக்கு பின்னால் இருக்கும் சங்கதியை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
குஜராத் – மும்பை மோதல்
ஐபிஎல் 2025 தொடரின் மிக முக்கியமான போட்டியான எலிமினேட்டரில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின. முலான்பூரில் நடைபெற்ற இபோட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. குஜராத் தோல்வியை தழுவி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இதை எல்லாரும் பெரும்பாலும் அறிந்திருப்பீர்கள். ஆனால், சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே ஒரு ஈகோ கிளாஸ் நேற்று நடந்ததை ரசிகர்கள் பத்திக்குச்சு போல் பிடித்துக் கொண்டார்கள்.
சுப்மன் கில் – பாண்டியா ஈகோ மோதல்
போட்டி தொடங்குவதற்கு முன்பாக மைதானத்தில் டாஸ் போடும்போதே கேப்டன்களாக நின்று கொண்டிருந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா இருவரும் சகஜமாக இல்லை. ஒருவருக்கொருவர் இறுக்கமான முகத்துடன் இருந்தனர். டாஸ் போட்ட பிறகு இரு அணி கேப்டன்களும் கை குலுக்கிக் கொண்டு தான் மைக்கில் பேச செல்வார்கள். ஆனால், ஹர்திக் டாஸ் வென்று கைகுலுக்க முற்பட்டபோது சுப்மன் கில் பார்த்தும் பார்க்காதது போல் நகர்ந்து கொண்டார். ஹர்திக் பாண்டியாவும் இறுக்கமான முகத்துடன் மைக்கில் பேசிவிட்டு சென்றார்.
பாண்டியா கொடுத்த ரியாக்ஷன்
மைதானத்தில் பேட்டிங் பவுலிங்கின்போதும் பாண்டியா, சுப்மன் கில் இடையே சிறியதாக வேண்டா வெறுப்பில் இருப்பதை போலவே நடந்து கொண்டனர். சுப்மன் கில் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்தபோது பீல்டிங்கில் இருந்த ஹர்திக் பாண்டியா திடீரென அவருக்கு அருகாமையில் செல்வதுபோல் சென்று வேகமாக கத்திக் கில்லை கடுப்பேற்றினார். இதனால் கில் உணர்ச்சிவசப்பட்டு சீக்கிரம் விக்கெட்டை பறிகொடுத்தார். போட்டி முடிந்தபிறகும் இரு அணிகளும் கைக்குலுக்கிக் கொள்ளும்போது பாண்டியா, கில் சகஜமாக இருக்கவில்லை. இருவரும் கை கொடுத்துக்கக்கூட இல்லை.
கில் பகிர்ந்த புகைப்படம்
இதனால் இருவருக்கும் இடையே ஈகோ மோதல் இருப்பதாக ரசிகர்கள் இன்று தீயாக பரப்பினர். கில் மற்றும் பாண்டியா ரசிகர்கள் ஆக்ரோஷமாக பதிலுக்கு பதில் அளித்து கிரிக்கெட் சோஷியல் மீடியா பக்கங்களை அலறவிட்டனர். இந்த சூழலில் தான் சுப்மன் கில் திடீரென இன்ஸ்டாகிராமில் பாண்டியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தாங்கள் இருவரும் அன்பாகவே இருப்பதாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பாண்டியாவும் அதற்கு மகிழ்ச்சியான ரியாக்ஷனை கொடுத்து இந்த பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.