புதுடெல்லி: “இந்தியா ராஜதந்திர தொடர்புகளை கொண்டிருந்தபோதிலும் பாகிஸ்தானிடமிருந்து விரோதத்தைத் தவிர வேறு எதையும் திரும்பப் பெறவில்லை.” என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் முதன்மையான பாதுகாப்பு உச்சி மாநாடான ஷாங்க்ரி-லா உரையாடலில் பேசிய இந்திய முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், “இந்தியா – பாகிஸ்தான் உறவில், நாங்கள் மூலோபாயம் இல்லாமல் செயல்படவில்லை. நாம் சுதந்திரம் பெற்றபோது, சமூக, பொருளாதார, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என ஒவ்வொரு அளவீட்டிலும் பாகிஸ்தான் நம்மை விட முன்னணியில் இருந்தது. இன்று, அதிக பன்முகத்தன்மை இருந்தபோதிலும் பொருளாதார செயல்திறன், மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நல்லிணக்கம் என அனைத்து முனைகளிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.
2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தனது பதவியேற்பு விழாவுக்கு அழைத்தது போல, இந்தியா பல முறை ராஜதந்திர ரீதியாக பாகிஸ்தானை அணுகியது. அதற்கு அடுத்த ஆண்டு, பிரதமர் மோடி லாகூருக்கு ஒரு திடீர் வருகை தந்து ஷெரீப்பைச் சந்தித்து அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார். ஆனால், கைதட்ட இரண்டு கைகள் தேவை. இருப்பினும் நமக்கு பதிலுக்குக் கிடைப்பது விரோதம் மட்டுமே என்றால், இப்போதைக்கு உறவை முறித்துக் கொள்வது ஒரு நல்ல உத்தியாக இருக்கலாம்” என்று அவர் கூறினார்.