ராமேசுவரம்: இலங்கையில் உள்ள மன்னாரில் கரை ஒதுங்கிய தமிழகத்தைச் சார்ந்த நாட்டுப் படகை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இந்திய-இலங்கை எல்லை கடலோரப் பகுதிகளில் இரு நாட்டு கடற்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இலங்கையிலுள்ள மன்னார் கடற்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக அந்நாட்டு கடற்படையினருக்கு தகவல் கிடைத்து.
மன்னார் கடற்பகுதிக்குச் சென்ற இலங்கை கடற்படையினர் கரை ஒதுங்கிய தமிழக நாட்டுப் படகினை சோதனையிட்டனர். சோதனையில் இன்ஜின் பொறுத்தப்படாத நாட்டுப் படகின் பதிவெண்ணை கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்தது எனவும், வானிலை காரணமாக கரை ஒதுங்கியிருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.