சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஷாங்க்ரி-லா மன்றத்தில் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு தலைவர்கள் பங்கேற்ற வட்டமேசை மாநாட்டில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் பங்கேற்றார். அப்போது வளர்ந்து வரும் போர் முறை குறித்தும், அதில் ஏஐ பங்கு குறித்தும் அவர் எச்சரித்தார்.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், நெதர்லாந்து, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படைத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இது ஆசிய அளவிலான முக்கிய பாதுகாப்பு உச்சி மாநாடு ஆகும். பாதுகாப்பு சார்ந்து நிலவும் முக்கிய சவால்கள், வளர்ந்து வரும் போர் முறை சார்ந்த போக்குகள் மற்றும் அதை முறியடிப்பதற்கான தீர்வுகள் குறித்து பேசினர்.
இதில் போர் சார்ந்து வளர்ந்து வரும் புவிசார் அரசியல் இயக்கவியல் மற்றும் விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்து முப்படைகளின் தலைமை தளபதியான அனில் சவுகான் எடுத்துரைத்தார். தொழில்நுட்பம் காரணமாக சாராதவர்களின் வசம் உள்ள அதிகாரம், அதன் ஊடாக மறைமுகப் போர்கள் மற்றும் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரும்காலத்தில் போர் நான்கு போக்குகளால் வடிவமைக்கப்படும் என்று அவர் பேசினார். அதில் சென்சார்களின் பெருக்கம், நீண்ட தூர ஹைப்பர்சோனிக் மற்றும் துல்லிய தாக்குதலுக்கான ஆயுதங்கள், தானியங்கு அமைப்புகளின் இயக்கம் மற்றும் ஏஐ, மெஷின் லேர்னிங், எல்எல்எம்எஸ், குவாண்டம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் போர்க்களம் குறித்து குறிப்பிட்டார்.
தனியார் தொழில்துறையினருடன் இணைந்து பாதுகாப்பு உற்பத்தி அமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது குறித்தும் அவர் பேசினார். இந்த வகையிலான நவீனமயமாக்கல் உத்தி செயல்பாட்டுத் தேவைகளுக்கும் உள்ளூர் நிலைமைகளுக்கும் ஏற்றது என்றார். உலக அளவிலான அமைப்பு சார்ந்து இந்தியாவின் நிலைப்பாட்டை தனது உரையில் அவர் சுட்டிக்காட்டினார்.