மும்பை,
10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால் முதல் கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்து யோக்ராஜ் சிங் தனது கருத்துகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பஞ்சாப் அணி வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். பஞ்சாப் அணிக்கு ஒரு அற்புதமான கேப்டன் இருக்கிறார். அவர் ஒரு அற்புதமான வீரர். இந்த ஆட்டம் பஞ்சாப் அணிக்கும் விராட் கோலிக்கும் இடையே நடக்கும். ஆர்.சி.பி அணிக்கு விராட் இருந்தால், பஞ்சாப் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கிறார்.
பஞ்சாப் அணி வெற்றி பெற வேண்டும். விராட் எந்த இடத்திலிருந்தும் ஆர்.சி.பி அணியை வெற்றி பெறச் செய்ய முடியும் என்றால், ஸ்ரேயாஸும் அதைச் செய்ய முடியும். பஞ்சாப் அணி விராட்டை அவுட் செய்யவில்லை என்றால், அவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வார்ர்கள். அவர் அவுட் ஆகவில்லை என்றால், அவரால் 250க்கும் அதிகமான ரன்களை எளிதாக துரத்த முடியும்.
பஞ்சாப் அணி வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். முதல் 10 ஓவர்களில் விராட் அவுட் ஆகவில்லை என்றால் ஆட்டம் முடிந்துவிட்டது. பஞ்சாப் அணி வெற்றி பெறும் என்று என் அறிவு சொல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.