பிஜ்னோர்,
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் மகனின் திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய தம்பதி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குப் சிங் (62 வயது) – லலிதேவி (56 வயது) தம்பதியின் மகனுக்கு வருகிற 9-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உறவினர்களுக்கு மகனின் திருமண அழைப்பிதழை கொடுத்துவிட்டு இருவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
நாகினா – தாம்பூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் பைக்கில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சமூக சுகாதார மையம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதையடுத்து அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.