பெரிய பெரிய நிறுவனங்கள், வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களை (FMCG) ஏன் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துகின்றன என்ற கேள்விக்கு கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராட்கட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சுதிர் சீதாபதி தனது லிங்க்ட்இன் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது…
“சமீபத்தில் கோத்ரேஜ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் லிமிட்டெட் ‘நிஞ்சா’ (Ninja) என்கிற செல்லப்பிராணிகளின் உணவையும், ‘பிளாக்’ (Bloq) என்கிற ஒரு வித நறுமணத் திரவியத்தையும் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது.
இதற்கு முன்பும், நாங்கள் எங்களுடைய ‘ஃபேப் லிக்விட் டிடர்ஜென்ட்’ மற்றும் ‘சிந்தால் பாடி வாஷை’ தமிழ்நாட்டில்தான் அறிமுகம் செய்தோம்.
இன்னும் பல எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களும் தமிழ்நாட்டில்தான் தங்களுடைய பொருட்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

புதிய பொருட்கள் அறிமுகத்தின் ஃபேவரைட் இடமாகத் தமிழ்நாடு இருப்பதற்குக் காரணம் என்ன? அதற்கான மூன்று மிகப்பெரிய காரணங்கள் இதோ…
1. தமிழ்நாடு தென் கிழக்கு ஆசிய நாடுகளைப் போன்றது!
தமிழ்நாட்டின் வருமானம் என்பது மிகப் பெரியது. ஒட்டுமொத்த இந்தியாவின் சராசரி வருமானத்தை விட 1.6 மடங்கு பெரியது தமிழ்நாட்டின் வருமானம். இது கிட்டதட்ட இந்தோனேசியா, வியட்நாம் நாடுகளின் வருமானத்திற்கு ஒத்தது ஆகும்.
தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் வளம் என்பது ஒரே ஒரு நகரத்தில்தான் கொட்டிக் கிடக்கும். ஆனால், தமிழ்நாட்டில் அது அனைத்து நகரங்களிலும் பரவலாக உள்ளது.
2. மீடியாக்களை எளிதாக அணுகலாம்
பெரிய பொருட்களின் அறிமுகத்திற்கு, தொலைக்காட்சி விளம்பரம் என்பது சிறந்த வழி. ஹரியானா போன்ற பிற பணக்கார மாநிலங்களில், அனைத்து இந்தி சேனல்களிலும் விளம்பரங்களை ஒளிபரப்பினால் மட்டுமே மக்களைச் சென்று சேர முடியும்.
கர்நாடகாவில் கூட, கன்னடம் பேசாத பல மக்கள் உள்ளனர். அவர்கள் கன்னட டிவி சேனல்களைப் பார்க்கமாட்டார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில், பெரும்பாலான மக்கள் தமிழ் பேசுவார்கள்… தமிழ் டிவி சேனல்களையும் பார்ப்பார்கள். அதனால், தமிழ்நாட்டில் வெறும் ஆறு வாரங்களில் 80 சதவிகித மக்களிடம் பொருட்களின் விளம்பரத்தைக் கொண்டு சேர்த்துவிடலாம்.

3. மாடர்ன் வர்த்தகம்
செல்ப்-சர்வீஸ் ஸ்டோர்களில் புதிய பொருட்கள் சிறப்பாகச் செயல்படும். காரணம், வாடிக்கையாளர்களை அவற்றைப் பார்த்து, பயன்படுத்தலாம். டி-மார்ட், ரிலையன்ஸ் போன்ற பெரிய ரீடைல் ஸ்டோர்களில் நமது புதிய பொருட்களைக் கொண்டு சேர்ப்பது சற்று கடினம். ஆனால், தமிழ்நாட்டில் பல சூப்பர் மார்க்கெட்கள் உள்ளன. அவற்றில் எளிதாக நமது பொருட்களைக் கொண்டு சேர்க்கலாம்.
இந்த மூன்றையும் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு. நாளை இந்திய மக்கள் என்ன வாங்குவார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, கோவை அல்லது சென்னைக்குச் செல்ல வேண்டியது மிக அவசியம்” என்று கூறியுள்ளார்.