தென்னாபிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஹென்ரிச் கிளாசன் சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். வெறும் 33 வயது ஆகும் ஹென்ரிச் கிளாசன் இந்த வயதில் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஹென்ரிச் கிளாசன் தற்போது ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். ஹென்றி கிளாசன் தென்னாபிரிக்க நாட்டிற்காக இதுவரை நான்கு டெஸ்ட் போட்டி, 60 ஒரு நாள் போட்டி மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 2,764 ரன்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அரை இறுதியில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் கடைசியாக தென் ஆப்பிரிக்கா நாட்டிற்காக விளையாடினர் கிளாசன். இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி தோல்வியை தழுவி இருந்தது.
ஓய்வை அறிவித்த கிளாசன்
“இந்த நாள் எனக்கு ஒரு சோகமான நாளாக அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்றுடன் ஓய்வை அறிவிக்கிறேன். இந்த முடிவை எடுப்பதற்கு எனக்கு நீண்ட நாட்கள் ஆனது. என்னுடைய குடும்பம் மற்றும் வருங்காலத்திற்காக இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன், இந்த முடிவை எடுப்பது மிகவும் குழப்பமான ஒன்றாக இருந்தது. ஆனால் இது எனக்கு தேவையான ஒன்றாகவும் இருந்தது” என்று கிளாசின் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். என்னுடைய குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன், அதனாலேயே இந்த ஓய்வை முடிவை அறிவிக்கிறேன் என்று ஹென்ரிச் கிளாசன் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள டி20 பேட்ஸ்மேன்களில் மிகவும் அதிரடியாக ஆட கூடியவர்கள் ஹென்ரிச் கிளாசனும் ஒருவர். குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை பந்தாடுவதில் கைதேர்ந்தவர் இவர். இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல்லில் விளையாட்டினார், மேலும் அதில் ஒரு சதமும் அடித்துள்ளார். இது தவிர உலகெங்கிலும் உள்ள பல கிரிக்கெட் லீக் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் கிட்டத்தட்ட தென்னாபிரிக்க அணி வெற்றி பெற செய்தார் ஹென்ரிச் கிளாசன். ஆனால் முக்கியமான கட்டத்தில் அவர் அவுட் ஆனதால் தென்னாபிரிக்கா தோல்வியை தழுவியது.
“எனக்கு இந்த கிரிக்கெட் நிறைய நண்பர்களையும், சொந்தங்களையும் கொடுத்துள்ளது. இவற்றை என் வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்ல விரும்புகிறேன். தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது என் வாழ்வை மாற்றியது. என்னுடன் இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தால் மட்டும் போதாது. என்னை நம்பி எனக்கு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. என்னுடைய நெஞ்சில் தென்னாப்பிரிக்காவை என்றும் சுமப்பேன், இது எனது வாழ்நாள் சாதனை என்று” ஹென்ரிச் கிளாசன் என்று தெரிவித்துள்ளார். நாட்டிற்காக விளையாடுவதை விட கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடினால் நிறைய பணம் கிடைக்கும் என்பதற்காக பலர் ஓய்வை அறிவித்து வருகின்றனர். அந்த வலையில் தற்போது ஹென்ரிச் கிளாசனும் விழுந்துள்ளார்.