ஆர்சிபி வெற்றி பேரணி.. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

Bangalore Latest News: குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (ஜூன் 03) ஐபிஎல் 2025 தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 190 ரன்கள் அடித்த நிலையில், அதனை துரத்த முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது. 18 வருட காத்திருப்புக்கு கோப்பை கிடைத்துள்ளதால், நேற்று இரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூரில் பட்டாசுகள் வெடித்து ஆர்சிபி அணியின் ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடினர். பெங்களூரு மட்டுமல்லாமல், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் ரசிகர்கள் வெடி வெடித்து ஆராவாரம் செய்தனர். 

இச்சூழலில் இன்று (ஜூன் 04) பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கர்நாடக அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கள் சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும் என்பதால் பேரணி ரத்து செய்யப்பட்டது. இதனிடையே பாராட்டு விழாவுக்காக ஆர்சிபி அணி வீரர்கள் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வந்தனர். 

ஆர்சிபி வீரர்களின் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் அதிகளவு திரண்டதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பலர் சிக்கி மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போது, மைதானத்தின் 7வது வாசலுக்கு ரசிகர்கள் அதிகளவு திரண்டனர். இதில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட, பலர் காயமடைந்துள்ளனர். 

இதுவரை மொத்தம் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 11 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆர்சிபி-யின் வெற்றியை கொண்டாட வந்த இடத்தில் பலர் உயிரிழந்திருப்பது ரசிகர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் படிங்க: நேரம் வந்துவிட்டது.. கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி சொன்ன முக்கிய தகவல்!

மேலும் படிங்க: ஈ சாலா கப் நம்து: ஆர்சிபி Celebration போட்டோஸ்!

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.