பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று விளையாடின. இதில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. அந்த அணிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே இன்று நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது.
இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, மகா கும்பமேளாவில் நிறைய பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 50, 60 பேர் இறந்தனர். நான் ஏதேனும் கேட்டேனா? அப்போது நான் எதுவும் விமர்சனம் செய்யவில்லை.
இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடக்கின்றன. அதற்காக, இதனை அந்த சம்பவங்களுடன் இணைத்து ஒப்பிட்டு, ஆதரிக்கும் வகையில் நான் பேச போவதில்லை. காங்கிரஸ் விமர்சித்தது என்றால், அது வேறு வகையான விசயம். நானோ அல்லது கர்நாடக அரசோ அதனை விமர்சித்தோமா? என கேள்வி எழுப்பினார்.
வெற்றி கொண்டாட்டத்தின்போது, பெரிய சோக சம்பவம் நடந்துள்ளது. சின்னசாமி ஸ்டேடியம் அருகே அது நடந்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது. காயமடைந்த நபர்களுக்கு அரசு இலவச சிகிச்சை அளிக்கும் என அவர் கூறியுள்ளார்.