கமல் குறித்த பேச்சுதான் சமீப நாட்களாக சமூக வலைதளப் பக்கங்களில் நிறைந்திருக்கிறது.
‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் கன்னட மொழி குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென கன்னட அமைப்புகளும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் கண்டனம் தெரிவித்திருந்தன.
ஆனால், கமல் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். கமல் மன்னிப்புக் கேட்காவிட்டால் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு தீ வைப்போம் என கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

மன்னிப்பு… முடியாது!
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கமல்ஹாசன் சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? கமல்ஹாசனாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, இது போல் மக்கள் மனம் புண்படும்படி பேசக் கூடாது.
300 கோடி ரூபாய் செலவில் படம் எடுத்திருந்தால் கமல் மன்னிப்பு கேட்கலாமே? கர்நாடகாவில் லாபத்தை எட்டுவதற்கு மன்னிப்புதான் ஒரே தீர்வு” என நீதிபதி கூறியிருந்தார்.
இதைத் தாண்டி, கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் நேற்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், “என் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. கன்னட மொழியைச் சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை.
நான் சொன்ன வார்த்தைகள், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதையும் மட்டுமே வெளிப்படுத்தின” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மீண்டும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கமல் சமர்பித்த கடிதத்தில் ‘மன்னிப்பு’ என்ற வார்த்தைகூட இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை இப்போது வெளியிடவில்லை. படத்தின் வெளியீட்டு தேதியைத் தள்ளி வைப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஒரு வார கால அவகாசம் தேவை என்றும் கமல் தரப்பினர் கேட்டிருக்கின்றனர்.
இதை தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கமலுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனக் கூறியிருக்கிறது.
“கர்நாடகாவிலும் கமல் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். ஆதலால், ‘தக் லைஃப்’ படத்தை இங்கு திரையிட விரும்புகிறோம். கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘தக் லைஃப்’ படத்தை வெளியிடத் தயாராக இருக்கிறோம்” என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு கூறியிருக்கிறார்.