புதுடெல்லி: குருத்வாரா அமைந்துள்ள இடத்தை மீட்டுத் தரக் கோரும் டெல்லி வக்பு வாரியத்தின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லியிலுளள ஷாதாரா பகுதியில் சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா அமைந்துள்ளது. ஆனால் குருத்வாரா அமைந்துள்ள இடத்தை டெல்லி வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி வருகிறது.
இதுதொடர்பான வழக்கை டெல்லி வக்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி சதீஷ் சந்திர சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வக்பு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் கோஸ் கூறும்போது, “தற்போது ஷாதாரா பகுதியில் குருத்வாரா அமைந்துள்ள இடம் டெல்லி வக்பு வாரியத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தில் குருத்வாரா அமைவதற்கு முன்பு அங்கு முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதி இருந்தது. எனவே, அந்த இடத்தை மீட்டு டெல்லி வக்பு வாரியத்துக்கு வழங்கவேண்டும்” என்றார்.
அப்போது நீதிபதி சதீஷ் சந்திர சர்மா கூறியதாவது: தற்போது அந்த இடத்தில் குருத்வாரா உள்ளது.. குருத்வாரா செயல்பட்டு வருவதால் அதை அப்படி விட்டு விடலாம். மத சம்பந்தமான கட்டிடம் அங்கு ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது.
எனவே, குருத்வாரா அமைந்துள்ள இடத்தை மீட்டுக் கோரும் உங்கள் கோரிக்கையை நீங்கள் அப்படியே விட்டுவிடலாம். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து டெல்லி வக்பு வாரியத்தின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.