புதுடெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முழுவதும் விற்றுத் தீர்வதன் பின்னணியில் உள்ள மோசடியை ரயில்வே கண்டுபிடித்துள்ளது. நாடு முழுவதும் ரயில்களில் பயணம் செய்வதற்கு, ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
எனினும், ஒவ்வொரு ரயிலுக்கும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் மொத்த டிக்கெட்டுகளும் விற்றுவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். குறிப்பாக பண்டிகைகள், விடுமுறை நாட்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தீர்ந்துவிடும். இத்தனைக்கும் பண்டிகைக்காக 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு தொடங்கும். அப்போதும் கூட டிக்கெட்டுகள் மளமளவென விற்று விடும். இதுகுறித்து நிறைய புகார்கள் ரயில்வேக்கு வந்த வண்ணம் இருந்தன.
போலி ஐ.டி. இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் முன்பதிவு டிக்கெட்டுகள் குறித்து தீவிர ஆய்வு நடத்தியது. அப்போது போலி பயனர் அடையாள எண்களை (யூசர் ஐ.டி.) பயன்படுத்தி ஏராளமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரையிலான 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பொது மற்றும் தத்கல் டிக்கெட் முன்பதிவுகளில் 2.9 லட்சம் சந்தேகத்துக்கிடமான பிஎன்ஆர்.களை (பயணிகள் விவரம்) ரயில்வே அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகள் நேற்று கூறியதாவது: ஐஆர்சிடிசி இணையதளத்தில் போலி ஐ.டி.க்களை உருவாக்கி டிக்கெட் முன்பதிவு செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜனவரி முதல் மே வரையில் 2.5 கோடி ஐ.டி.க்கள் முடக்கப்பட்டன. மேலும், 20 லட்சம் ஐ.டி.க்களை ஆய்வு செய்து வருகிறோம்.
இதுதொடர்பாக இதுவரை 134 புகார்கள், தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 6,800 இமெயில் முகவரிகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடரும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். போலி ஐ.டி.க்கள் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அதை அதிக விலைக்கு பொதுமக்களுக்கு விற்று வருவதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.