அனுபவம் உள்ள வீரர்களே வேண்டும்! 2026 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி!

தற்போது ஐபிஎல் 2025 போட்டிகள் முடிவடைந்துள்ளது, இனி அடுத்து சர்வதேச போட்டிகள் மட்டுமே நடைபெறும். 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா நாடுகளில் நடைபெற உள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் என இரண்டு மாதங்கள் இந்த உலக கோப்பை நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்று இருந்தது. தற்போது டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். 

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறலாம் என்று ஒவ்வொரு வீரர்களும் போட்டி போட்டு விளையாடினர்.  குறிப்பாக பல இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிக்காட்டி உள்ளனர். இது தேர்வாளர்களுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. டி20  போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அந்த இடங்களை பிடிக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர். சூரியகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து டி20 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று வருகிறது. 

இந்திய அணி விளையாடிய கடந்த சில டி20 போட்டிகளில் இருந்து சுப்மான் கில் மற்றும் எஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக அபிஷேக் சர்மா, திலக் வர்மா  போன்ற இளைஞர்கள் சேர்க்கப்பட்டனர். இருப்பினும் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்துள்ளனர். இதனால் டி20 அணியில்  அவர்களது பெயரும் இடம் பெறலாம். சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆகவும்கில் தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக விளையாடிய இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டு இருந்தார் கில். சமீபத்திய டி20 போட்டிகளில் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார், ஆரம்பத்திலிருந்து அதிரடி காட்டும் இவர் போட்டியை மாற்றும் தன்மை கொண்டவராக இருப்பதால் இவரது பெயர் நிச்சயம் இருக்கும். 

அதேபோல திலக் வர்மாவும் தன்னுடைய இடத்தை பிடித்து வைத்துள்ளார். நீண்ட நாட்களாக இந்திய டி20 அணியில் இடம் பெறாமல் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு ஐபிஎல்-ல் தனது பேட்டிங் திறனை நிரூபித்துள்ளார், கேப்டன் ஆகவும் இருந்து தனது அணியை சிறப்பாக வழி நடத்தி உள்ளார். இவரது பெயரும் டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. சஞ்சு சம்சனுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டாலும் அதனை அவர் பெரிதாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே ஜித்தேஸ் சர்மா முதல் தேர்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரிஷப் பந்தும் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் நிச்சயம் இடம் பெறுவார்கள். மேலும் பந்துவீச்சாளர்களாக பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெறலாம். கூடுதல் பந்து வீச்சாளராக ஹர்சித் ராணா தேர்வாக வாய்ப்பு உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.