பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: பிரிட்டனுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டனுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி டெல்லிக்கு வந்துள்ளார். அப்போது அவர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்துப் பேசினார். முன்னதாக, டேவிட் லாமி பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவரிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: நாட்டில் தீவிரவாதம் சிறிதும் இருக்கக்கூடாது என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியாவில் தீவிரவாதம் வளர்வதை ஒருபோதும் நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். தீவிரவாதத்தை வேரறுப்பதே எங்களது நோக்கம்.

பஹல்காமில் 26 அப்பாவிகளை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்காகவே நாங்கள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். எங்களது நிலையை, எங்கள் நட்பு நாடான பிரிட்டன் உள்ளிட்டவை புரிந்துகொள்ளும் என்று நம்புகிறோம்.

பஹல்காமில் தாக்குதல் நடந்தபோது அதை மிகவும் கண்டித்த பிரிட்டன் நாட்டுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியா, பிரிட்டன் இடையேயான தாராள வர்த்தக ஒப்பந்தமானது ஒரு மைல்கல்லாக இருக்கும். இது இரு நாடுகளிடையே வர்த்தகத்தையும், நல்லுறவையும் வலுப்படுத்தும். இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.