மணிப்பூரில் முக்கிய மெய்தி இனத் தலைவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலையடுத்து போராட்டக்காரர்கள் தலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
மணிப்பூரில் அரம்பாய் தெங்கோல் (ஏடி) என்ற மெய்தி அமைப்பின் தலைவர் கனன் சிங் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மொய்ராங்தெம் அமித்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 2024-ல் மூத்த காவல் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவங்களி்ல் கனன் சிங் சந்தேகத்துக்குரிய முக்கிய நபராக உள்ளார். இவர், மாநில காவல்துறையின் கமாண்டோ பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர். கடமையை செய்ய தவறியதற்காக இவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மெய்தி இனக்குழுவின் முக்கிய தலைவராக கருதப்படும் கனன் சிங் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து நூற்றுகணக்கான இளைஞர்கள் கருப்பு நிற டி-சர்ட் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கைகளில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தலையில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால், பெரும் பதற்றம் ஏற்பட்டது.
போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், “ அரசு கோரிக்கையின்படி நாங்கள் ஆயுதங்களை திரும்ப வழங்கினோம். வெள்ளத்தின்போது நீங்கள் செய்ய வேண்டிய நிவாரணப் பணிகளை நாங்கள் செய்தோம். இப்போது, நீங்கள் எங்களையே கைது செய்கிறீர்களா?. நாங்கள் தற்கொலை செய்து கொள்வேம்” என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்..
முன்னதாக அரம்பாய் தெங்கோல் அமைப்பின் தலைவர் கனல் சிங்கின் கைதை கண்டித்து போராட்டக்காரர்கள் சனிக்கிழமை இரவு டயர்களை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இம்பாலின் பல பகுதிகளில் துப்பாக்கிசூடு சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் வன்முறை மேலும் பரவாமல் இருப்பதற்காக, 5 நாட்களுக்கு இணைய சேவையை துண்டிக்க ஆளுநர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பிஷ்ணுபூர், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல் மற்றும் காக்சிங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.