மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்த ராகுல் காந்தியின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றன. இது வரும் பிஹார் தேர்தலிலும் நடக்கும்” என குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக அவர் கூறியிருப்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது சட்டத்தின் ஆட்சியை அவமதிக்கும் செயல் ஆகும். இந்த உண்மைகள் அனைத்தையும் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதியே காங்கிரஸ் கட்சிக்கு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் எழுப்பும்போது, உண்மைகள் அனைத்தும் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிகிறது. யாராவது தவறான தகவலை பரப்பினால் அது சட்டத்தை அவமதிப்பதாக மட்டுமல்லாமல், அவர்களின் அரசியல் கட்சியால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.