மும்பை: மும்பையில் கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளில் 5 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
மும்பையில் மும்ப்ரா ரயில் நிலையம் அருகே இன்று காலை 9.30 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSTM) நோக்கிச் சென்றுகொண்டிருந்த புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக ஏராளமான பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்துள்ளனர்.
அப்போது, பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக சுமார் 12 பயணிகள் தண்டவாளத்தில் விழுந்ததாகவும், அவர்களில் 5 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் நடந்த மும்ப்ரா ரயில் விபத்தைத் தொடர்ந்து, மும்பை புறநகர் ரயில் நிலையத்திற்காக உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரயில் பெட்டிகளிலும் தானியங்கி கதவு மூடும் வசதிகள் இருக்கும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, கதவு மூடும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா, “கசாரா செல்லும் ரயிலின் காவலர், தண்டவாள ஓரத்தில் காயமடைந்த பயணிகள் குறித்து காலை 9.30 மணியளவில் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். பயணிகள் எந்த ரயிலில் இருந்து விழுந்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. விபத்து எப்படி நடந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.