England vs India Test Series: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் (Anderson Tendulkar Series) மீது தற்போது பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கௌதம் கம்பீர் (Gautam Gambhir) தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் உள்நாட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரிலும் இந்திய அணி மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது. அதன் பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிசந்திரன் அஸ்வின் என மூத்த வீரர்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
Anderson Tendulkar Series: இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பு
இந்த சூழலில், பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணி (Team India), ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது என்பதால் கௌதம் கம்பீர் மீது அதிக அழுத்தம் உள்ளது. அதுமட்டுமின்றி, தற்போது புதிய டெஸ்ட் கேப்டனாகவும் இளம் வீரர் சுப்மான் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் என்ன சாதிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது.
கேப்டனை போல் இந்திய அணி வீரர்கள் பெரும்பாலோனர் இளம் வீரர்களாவே உள்ளனர். ஜடேஜா, கேஎல் ராகுல், கருண் நாயர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் மட்டுமே ஓரளவு அனுபவ வீரர்கள். அதாவது 30 வயதை தாண்டிய வீரர்கள். இவர்களில் ஒரு சிலருக்கு இங்கிலாந்தில் விளையாடிய அனுபவமும் குறைவு. இப்படியிருக்க, இவர்களை வைத்து சுப்மான் கில் (Shubman Gill) என்ன சாதிக்கப்போகிறார் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
Rishabh Pant Injury: ரிஷப் பண்டுக்கு காயம்
இந்த டெஸ்ட் தொடரில் மிக முக்கியமான வீரர் யார் என கேட்டால் நிச்சயம் பும்ரா என பலரும் சொல்வார்கள். பும்ராவுக்கு அடுத்து சொல்ல வேண்டும் என்றால் அது துணை கேப்டன் ரிஷப் பண்ட்தான். ஓப்பனிங் பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் அனைவருக்குமே இங்கிலாந்தில் பெரிய வேலை காத்திருக்கிறது என்றாலும் ரிஷப் பண்ட் (Rishabh Pant) மட்டும்தான் X Factor கொண்ட வீரர் ஆவார். இவர் இந்த 5 போட்டிகளில் அதிக ரன்களை குவித்தார் என்றால் இந்தியா இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
அப்படியிருக்க, இந்திய அணி லண்டனில் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேட்டிங் பயிற்சியின் போது அவரது இடது கையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மருத்துவர் சோதித்ததாகவும், காயம்பட்ட இடத்தில் ஐஸ் பேக் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காயம்பட்ட இடத்தில் பேண்டேஜ் போடப்பட்டு, அடுத்து பயிற்சிக்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் முதல் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ENG vs IND: இந்த வீரருக்கு சூப்பர் வாய்ப்பு
ஒருவேளை, ரிஷப் பண்ட் விளையாட முடியாவிட்டால் பேக்-அப் விக்கெட் கீப்பராக துருவ் ஜூரேல் அணியில் உள்ளார். இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ள துருவ் ஜூரேல், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் (India A vs England Lions) சிறப்பாக விளையாடி நடந்த 3 இன்னிங்ஸிலும் 94, 53*, 52 என சிறப்பாக விளையாடி உள்ளார். மேலும், தற்போது நடைபெற்று வரும் 2வது போட்டியின் 2வது இன்னிங்ஸில் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இன்று இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. ரிஷப் பண்ட் இல்லாதபட்சத்தில் துருவ் ஜூரேல் (Dhuruv Jurel) விளையாடுவார். துணை கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ஜடேஜா பொறுப்பேற்பார்கள்.