இந்திய அணியின் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அவர் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட உள்ளார்.
அவர் கவுண்ட் டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒருநாள் கோப்பைக்கும் யார்க்ஷயர் அணியுடன் இணைய உள்ளார். அவர் வரும் ஜூலை மாதம் ஸ்கார்பரோவில் சர்ரேக்கு எதிரான கவுண்டி போட்டிக்கு முன்பாக யார்க்ஷயர் அணியுடன் இணைவார். மேலும், அவர் அந்த சீசன் முடியும் வரை அணியுடன் இருப்பார் என அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரஞ்சி டிராபியில் மகாராஷ்டிரா அணிகளை ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அவர் இதுவரை 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 115 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் 23 டி20 போட்டிகளில் விளையாடி 633 ரன்கள் விளாசி உள்ளார். மொத்தமாக சர்வதேச அரங்கில் அவர் 1 சதம் மற்றும் 5 அரைசதங்களை விளாசி இருக்கிறார்.
கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட், இங்கிலாந்திற்கு சென்று கிரிக்கெட் விளையாடுவது எனது இலக்கில் ஒன்றாக இருந்தது. அந்நாட்டில் யார்க்ஷயரை விட பெரிய கிளப் எதுவும் இல்லை. சீசனின் முக்கியமான பகுதியில் நான் விரைவாக பங்களிப்பது எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். மேலும், ஒருநாள் கோப்பை வெல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு என கூறினார்.
மேலும் படிங்க: 2025ல் இதுவரை ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்கள்! அவர்களின் வயது என்ன?
மேலும் படிங்க: விற்பனைக்கு வரும் ஆர்சிபி அணி! பிரச்சனைக்கு பிறகு கைமாற்ற திட்டம்!