சென்னை: கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை சட்டரீதியாக வழங்கி கடமையை செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், சமக்ர சிக்க்ஷா திட்டத்தில் இருந்து இந்த நிதியை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஒதுக்கீட்டின் கீழ் இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கப்படவில்லை எனக்கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் அமைப்பின் நிர்வாகியான வே.ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. கடந்த 2021 முதல் 2023 வரை மத்திய அரசு நிதி ஒதுக்காத நிலையிலும் தமிழக அரசு தனது பங்களிப்பு நிதியைக் கொண்டு சமாளித்தது. தற்போது சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது’’ என்றார்.
அப்போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘‘மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை என்பதால் கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான தொகை ஒதுக்கப்படவில்லை’’ என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் நோக்கமே அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான கல்வி தடையின்றி சென்றடைய வேண்டும் என்பதுதான். எனவே கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கி, மத்திய அரசு தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.
கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை தேசிய கல்விக் கொள்கை மற்றும் சமக்ர சிக்க்ஷா திட்டத்துடன் இணைக்க எந்த அவசியமும் இல்லை. சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அதுதொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
2024-25-ம் நிதியாண்டில் சமக்ர சிக்க்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.3 ஆயிரத்து 586 கோடி ஒதுக்கப்பட வேண்டும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.2 ஆயிரத்து 151 கோடி. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதி ரூ.200 கோடி. எனவே இந்த ரூ.200 கோடியை ஒதுக்கி கொடுப்பதில் மத்திய அரசுக்கு எந்த சிக்கலும் இருக்காது.
அதேபோல கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை சமக்ர சிக்க்ஷா திட்டத்தில் இருந்து நீக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து, கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிய நிதியை சட்டரீதியாக ஒதுக்க வேண்டும். இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி உரிய காலக்கெடுவுக்குள் அந்த தொகையை தமிழக அரசு 25 சதவீத இடஒதுக்கீட்டுக்காக தனியார் பள்ளிகளுக்கு எந்தவொரு பாரபட்சமும் காட்டாமல் பிரித்து வழங்க வேண்டும்.
அதேபோல மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கவில்லை எனக்கூறி காலம் தாழ்த்தாமல், சட்டரீதியாக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உரிய காலக்கெடுவுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.