‘கிரேட்டா தன்பெர்க் கோப மேலாண்மை வகுப்புக்குச் செல்ல வேண்டும்’ – ட்ரம்ப் அறிவுரை

நியூயார்க்: இஸ்ரேல் ராணுவத்தால் கடத்தப்பட்டதாக கிரேட்டா தன்பர்க் குற்றஞ்சாட்டிய நிலையில், ‘தன்பர்க் கோப மேலாண்மை வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவுரை வழங்கியுள்ளார்.

காசாவை நோக்கி நிவாரண கப்பலில் சென்ற தனது குழுவினருடன் கடத்தப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் நேற்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதனை இஸ்ரேல் உடனடியாக மறுத்தது.

நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை காசாவை நோக்கிச் சென்றபோது, ​​மேட்லீன் நிவாரணக் கப்பலை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தன. அது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய கிரேட்டா தன்பர்க், “இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால், நாங்கள் சர்வதேச நீரில் தடுத்து நிறுத்தப்பட்டு கடத்தப்பட்டுள்ளோம். என்னையும் மற்றவர்களையும் விரைவில் விடுவிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இருப்பினும், சில மணிநேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் சமூக வலைதளத்தில் கிரேட்டா தன்பர்க்கின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “கிரேட்டா தன்பர்க் தற்போது இஸ்ரேல் வழியாக பாதுகாப்பாக சென்று கொண்டிருக்கிறார்” என்று கூறியது. மேட்லீன் கப்பலில் குழந்தைகளுக்கான பால்பவுடர், மாவு, அரிசி, டயப்பர்கள், பெண்கள் சுகாதாரப் பொருட்கள் மற்றும் பல வகையான பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டன.

இந்த நிலையில் தன்பெர்க் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “அவர் ஒரு விசித்திரமான நபர். அவர் ஒரு இளம், கோபக்காரர். அது உண்மையான கோபமா என்று எனக்குத் தெரியவில்லை; நம்புவது கடினம். அவர் நிச்சயமாக வித்தியாசமானவர். அவர் கோப மேலாண்மை வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதுதான் அவருக்கு எனது முதன்மை பரிந்துரை. கிரேட்டா தன்பர்க்கை கடத்தாமலேயே இஸ்ரேல் போதுமான சிக்கல்களைக் எதிர்கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.