ஐபிஎல்லில் 2008 ஆம் ஆண்டிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது ஆர்சிபி அணி. ரஜத் பட்டிதார் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இந்நிலையில் கோப்பையை வென்ற ஒரு வாரத்திற்குள் தங்களது அணியை விற்பனை செய்ய அணி நிர்வாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முழுவதுமாகவோ அல்லது பாதி அளவில் அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க: ICC Hall Of Fame பட்டியலில் தல தோனி! கௌரவப்படுத்திய ஐசிசி!
தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை யூனிடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் இந்தியா (United Spirits Ltd in India) என்ற நிறுவனம் Diageo Plc என்ற நிறுவனத்தின் வழியாக நடத்தி வருகிறது. எவ்வளவு விலைக்கு அணியை விற்க போகின்றனர் என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, அதன் இந்திய மதிப்பு சுமார் 16,834 கோடியாகும்.
ஆர்சிபி அணியின் நிர்வாகம் அணியை மொத்தமாகவோ அல்லது பாதி ஷேரை விற்பனை செய்ய முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு நல்ல லாபத்தில் அணியை விற்கலாம் என்ற காரணத்திற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல்லில் கோப்பையை வென்றதால் ஆர்சிபி அணியின் மார்க்கெட் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் இந்த சமயத்தில் விற்பனை செய்தால் கூடுதல் லாபத்தை பெறலாம் என அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அடுத்த சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்சிபி அணி தங்களது முதல் கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக பெங்களூருவில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த நிகழ்ச்சியில் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து பெரும் பரபரப்பு நிலவி வந்த நிலையில் ஆர்சிபி அணியின் நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை விஜய் மல்லையா வாங்கி இருந்தார். கிங்பிஷர் ஏர்லைன்ஸ்ன் நிறுவனரான மல்லையா மிகப்பெரிய தொகைக்கு ஆர்சிபி அணியை வாங்கி இருந்தார். பிறகு சில மோசடி புகார்கள் அவர் மீது வந்த நிலையில் ஆர்சிபி அணியை Diageo Plc நிறுவனம் வாங்கி நடத்தி வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியை தொடர்ந்து ஐபிஎல்லில் உள்ள பத்து அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு தான் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமூக வலைதள அக்கவுண்ட்களிலும் அதிகமான பாலோவர்ஸ்களை ஆர்சிபி அணி வைத்துள்ளது. தங்களது முதல் கோப்பையை வென்ற ஒரு வாரத்தில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.
மேலும் படிங்க: அஸ்வின் விளையாட தடை? 30% அபராதம் விதிப்பு…! TNPL-ல் நடந்தது என்ன?