புளோரிடா: இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபன்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4 பயணத்தின் ஏவுதல் இன்று ஐந்தாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது என்று ஸ்பேஸ்-எக்ஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜூன் 11 புதன்கிழமை, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A (LC-39A)-லிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஃபால்கன் 9-இன் ஆக்சியம் ஸ்பேஸின் ஆக்சியம் மிஷன் 4 (ஆக்ஸ்-4) ஏவுதலில் இருந்து ஸ்பேஸ்-எக்ஸ் விலகுகிறது. ஃபால்கன் 9 ஏவுகணையின் நிலையான தி பூஸ்டர் ஆய்வுகளின் போது அடையாளம் காணப்பட்ட LOx கசிவை சரிசெய்ய ஸ்பேஸ்-எக்ஸ் குழுக்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. இந்த பணி முடிந்ததும், நாங்கள் ஒரு புதிய ஏவுதல் தேதியைப் பகிர்ந்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் வி.நாராயணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஃபால்கன் 9 விண்கலத்தின் பூஸ்டர் நிலையின் செயல்திறனை சரிபார்க்க ஏவுதள வாகன தயாரிப்பின் ஒரு பகுதியாக, ஏவுதளத்தில் ஏழு வினாடிகள் சூடான சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது LOX கசிவு கண்டறியப்பட்டது என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. இது குறித்து இஸ்ரோ குழு ஆக்சியம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிபுணர்களுடன் நடத்திய விவாதத்தின் அடிப்படையில், கசிவை சரிசெய்து, ஏவுதலுக்குத் தேவையான சரிபார்ப்பு சோதனையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, முதல் இந்திய கேப்டனை ஐஎஸ்எஸ்-க்கு அனுப்புவதற்காக ஜூன் 11, 2025 அன்று திட்டமிடப்பட்ட ஆக்சியம்-4 ஏவுதல் ஒத்திவைக்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்த ஏவுதல் செவ்வாய்க்கிழமையன்று திட்டமிடப்பட்டது, ஆனால், மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்பாக மோசமான வானிலை காரணமாக இந்த ஏவுதல் ஜூன் 8-ம் தேதியிலிருந்து ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சுபான்ஷு சுக்லா யார்? – அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.
இதன்படி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் ஏவப்பட உள்ளது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணிக்க உள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானியாக செயல்பட உள்ளார். இந்த விண்கலம் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது. இவர்கள் அங்கு 14 நாட்கள் தங்கி இருப்பார்கள் என கூறப்படுகிறது.
கடந்த 1984-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணித்தார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, கடந்த 2006-ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 2024-ம் ஆண்டில் குழு கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த சூழ்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக சுபான்ஷு தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ரஷ்யாவின் யூரி காகரின் விண்வெளி மையத்தில் சேர்ந்து இவர் சிறப்பு பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.