சென்னை: சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், “எனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்த சலுகைகளையும் கேட்க போவதில்லை,” என குறிப்பிட்டிருந்தார்.
அப்போது, அரசுத் தரப்பில், “சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க தாசில்தார்களுக்கு அதிகாரம் அளிக்கும் எந்த உத்தரவும் இல்லை,” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம் எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 11) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ்.என்.சுப்ரமணியன், டி.நிக்ஸன் ஆகியோரும், அரசு தரப்பில் செல்வேந்திரனும் ஆஜராகி வாதிட்டனர். அப்போது நீதிபதிகள், “இது தொடர்பாக ஏற்கெனவே திருப்பத்தூர், கோவை, அம்பத்தூர் தாசில்தார்கள் சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கி உள்ளனர். மனுதாரருக்கு அது போல் சான்றிதழை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும்,” என உத்தரவிட்டனர்.
மேலும், சாதி ரீதியிலான பாரபட்சத்தை தடுக்க வேண்டும் வேண்டும் என போராடி வரும் நிலையில், சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரும் மனுதாரருக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். சாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு பரிந்துரைத்தனர்.
நாட்டில் நிலவும் சாதி, மத பாகுபாடுகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசியல் சாசனம் சாதி ரீதியிலான பாகுபாடுகளை தடை செய்துள்ள போதும், சமூக வாழ்க்கையில், அரசியலில், கல்வியில், வேலைவாய்ப்பில் ஏற்கெனவே சாதி, மதம் இன்றளவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.