புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடியின் 11 ஆண்டு கால ஆட்சி இந்தியாவின் பொற்காலம் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது முறை நாட்டின் பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. அவர், தனது 11 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்கிறார். இதைப் பாராட்டும் வகையில் நாட்டின் பாஜக ஆளும் மாநிலங்களில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த வகையில், பாஜகவின் முக்கிய மாநிலமான உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. உ.பி தலைநகரான லக்னோவின் பாஜக அலுவலகத்தில் இக்கண்காட்சியை முதல்வர் யோகி திறந்து வைத்தார்.
அப்போது அவர் பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி இந்தியாவின் பொற்காலம் எனக் குறிப்பிட்டு பாராட்டினார்.
இது குறித்து முதல்வர் யோகி ஆற்றிய உரை பின்வருமாறு: தனது பதவிக் காலத்தில், பிரதமர் மோடி இந்தியாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட நிலையற்ற அரசாங்கங்களால் பொதுமக்கள் நம்பிக்கையை இழந்திருந்தனர். உலக அளவில் இந்தியாவின் பிம்பம் களங்கப்படுத்தப்பட்டது. ஊழல், திருப்திப்படுத்துதல் மற்றும் உறவினர்களுக்கு சலுகை காட்டுதல் இல்லாத பிரதமர் மோடியின் தலைமை, நாட்டை வளர்ச்சியடைந்ததாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் மாற்றி உள்ளது.
இதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒரு செயல் திட்டத்தை பிரதமர் மோடி அரசு முன்வைத்துள்ளது. இந்த 11 ஆண்டுகள் சேவை, நல்லாட்சி மூலம் சமூக மற்றும் கலாச்சார பக்கத்திலும், பொருளாதார முன்னணியிலும் நாட்டிற்கு ஒரு புதிய அடையாளத்தை வழங்கியுள்ளன. மத்திய அரசின் நிர்வாகக் கொள்கையின் தெளிவு, பணி முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறல் ஆகியவை நிர்வாகத்தின் புதிய அடையாளமாக மாறிவிட்டன. வளர்ச்சி என்பது வெறும் முழக்கம் அல்ல. பாரம்பரியத்தையும், வளர்ச்சியையும் ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த 11 ஆண்டுகள் நாட்டிற்கு உலகில் ஒரு புதிய அடையாளத்தை அளித்துள்ளன.
கடந்த 11 ஆண்டுகளில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜியநிலை சகிப்புத்தன்மை ஆகியவற்றில் நமது உறுதிப்பாட்டைக் கண்டோம். இந்த 11 ஆண்டு காலம், இந்தியாவின் மூலோபாய சக்தியை உலகம் உணர்ந்த நேரத்தில் நிறைவடைகிறது.
இந்தியாவின் ராணுவ சக்தி பாகிஸ்தானில் சோதிக்கப்பட்டு உலகத்தால் நம்பப்படுகிறது. யாராவது நம் மீது போரை திணித்தால், அதற்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக், வான்வழித் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுக்கப்படும். இந்தியா உலகில் அமைதி பற்றி தொடர்ந்து முழக்கமிடும் நாடு மட்டும் அல்ல, போர் திணிக்கப்பட்டால் அதற்கு வலுவான பதிலடியும் கொடுக்கும் நாடு.
இந்த 11 ஆண்டுகளில் இந்தியாவை ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என பிரதமர் மோடி காட்டியுள்ளார். அவரது தலைமையில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாட்டின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தின் மூலம் செய்யப்பட்ட எதையும் கடந்த 65 ஆண்டுகளில் செய்திருக்க முடியாது.
வம்ச மற்றும் குடும்ப அரசியலும் சாதியத்தை ஊக்குவிக்கிறது. இதுபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடக்கக்கூடாது, இதன் காரணமாக நாடு முன்பு அடிமையாக மாற வேண்டியிருந்தது. மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பெண்களின் தலைமை ஊக்குவிக்கப்பட்டுள்ளது. மோடி அரசின் ஆட்சிக் காலத்தில், எல்லா சூழ்நிலைகளிலும் இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டுள்ளது. சமூக நீதி பாதுகாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், புதிய இந்தியாவை நாம் கண்டுள்ளோம். கடந்த 11 ஆண்டுகளில், ஜுன் 11 ஆம் தேதி முதல் நான்காவது பொருளாதார நாடாக மாறிய பெருமையை இந்தியா அடைந்துள்ளது. 200 ஆண்டுகளாக நம்மை ஆண்ட பிரிட்டனை நாம் தோற்கடித்துள்ளோம். இந்தியா தனது தனிநபர் வருமானத்தை 11 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கியுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதிகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதால், 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.
மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், நாட்டின் கலாச்சார மற்றும் புனித நகரங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோது, நாடு முழுவதும் ஒரு புதிய வடிவிலான முக்கிய புனிதத் தலங்கள் நம் முன் வந்துள்ளன. அயோத்தி உலகம் முழுவதுற்குமான ஒரு புனித நகரமாக நிறுவப்பட்டுள்ளது. இதனுடன், அரசாங்கம் படேலின் பிரம்மாண்ட சிலையை நிறுவி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை நிறுவி அவர்களை கவுரவித்துள்ளது. மோடி அரசு, நாட்டின் பாரம்பரியத்தை வளர்ச்சியுடன் இணைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் வலைதளத்திலும் பிரதமர் மோடி ஆட்சி மீது ஒரு பாராட்டு அறிக்கையை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர் முக்கியமாக பிரதமர் மோடியின் திட்டங்களைக் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, பிரதான் மந்திரி ஸ்வானிதி யோஜனா, ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா, ஜன் தன் யோஜனா மற்றும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா போன்ற பல பொது நலத் திட்டங்கள் சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாக முதல்வர் யோகி தெரிவித்துள்ளார். இந்த திட்டங்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன் அதில் பிரதமரின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் கூறியுள்ளார்.
எளிதான விமானப் பயணம், வந்தே பாரத் ரயில்கள், புதிய நெடுஞ்சாலைகள், தொழில் உள்கட்டமைப்புகள், விவசாயம், வணிகம் உள்ளிட்ட முன்னேற்றங்கள் , இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்ற வழி வகுப்பதாகவும் முதல் யோகி தெரிவித்தார். பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால சாதனைக்காக ‘வலுவான இந்தியா’ என்ற தலைப்பில் தொழில்முறை சந்திப்பும், ‘இந்தியாவை மாற்றுதல்’ என்ற தலைப்பில் டிஜிட்டல் போட்டியும் ஜூன் 10-11 தேதிகளில் உ.பி முழுவதிலும் நடைபெறுகிறது. 12 முதல் 14 வரை, விக்சித் பாரத் சங்கல்ப் சபைகள் கோட்ட அளவில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
ஜூன் 21 அன்று கோட்ட அளவில் யோகா முகாம்களும் உ.பி.யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், நகரங்களின் மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள், மாவட்டம் முதல் பூத் நிலை வரை உள்ளவர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.